தகுதியும் தராதரமும்

Posted on March 22, 2016 02:09:38

A TORONTO TAMIL CHURCH - WORTHINESS AND STATUS - CHRISTIAN ARTICLE IN TAMIL - TORONTO, ONTARIO, CANADA

உலகிலே மனிதர்கள் வேறுபட்ட, பல தரப்பட்ட தகுதிகளை கொண்டவர்களாக இருக்கின்றனர். இத்தகுதிகள் ஓருவரின் திறமைகள், கல்வி அறிவு, செல்வம் என பல காரணிகளில் தங்கியுள்ளது. ஓருவரிடத்தில் ஒரு வேலையை ஒப்படைக்கும் முன் அதை செய்யத்தக்க அறிவு, தகுதி அவருக்கு உள்ளதா என்று அறிவது அவசியமே. இத்தகுதிகள் இவ்வுலக வாழ்வில் தராதரங்களை உண்டுபண்ணுகின்றது. நாளடைவில் இவைகளே ஏற்றத் தாழ்வுகளையும் பிரிவினைகளையும் ஏற்படுத்துகின்றது.

பல காலமாக சமூதாயத்தினால் தாழ்த்தப்பட்டு புறக்கணிக்கப்பட்ட ஒருவரை தேவ ஊழியர் ஒருவர் சந்தித்து இயேசு கிறிஸ்துவைப்பற்றி அவருக்கு கூறினார். அவரும் சந்தோஷமாய் தேவனோடு வாழும் வாழ்வை விரும்பி ஏற்றுக்கொண்டார். தேவ ஊழியரும் அவரைக்  தேவாலயத்தில் வந்து தேவனை ஆராதிக்கும்படி கேட்டுக்கொண்டார். ஞாயிற்றுக் கிழமை அன்று  தேவாலயத்திற்கு சென்ற அவர்; தேவாலயத்திற்கு வெளியே தெருவோரமாக முழங்கால் படியிட்டு ஆராதித்தார். இதை அறிந்த தேவ ஊழியர் விரைவாக தேவாலயத்திற்கு வெளியே அவரிடத்தில் வந்து அவரை உள்ளே வந்து மற்றவர்களோடு சேர்ந்து ஆராதிக்கும்படி கூறினார். ஆனால் அவரோ, தான் உள்ளே வர தனக்கு அதற்குரிய தகுதியோ தராதரமோ இல்லை என்றும் தான் வெளியிலே இருந்து ஆரதிப்பதாகவும் கூறினார்.  அந்த தேவ ஊழியரோ மிகவும் வருந்தி அவரை அழைத்தார். இறுதியில் தேவாலய முற்றம்வரைக்கும் வருகிறேன் என்று சொல்லி உள்ளே வந்து முற்றத்தில் முழங்கால் படியிட்டு ஜெபித்தார். சமூதாய அந்தஸ்து என்ற பிரமை அவரை கட்டிப்போட்டதினால் அவர் அவ்விதமாக நடந்து கொண்டார்.

இந்தப் பிரமையானது அவரைமட்டுமல்ல பலரை பல வேறுபட்ட நிலைகளில் கட்டிவைத்துள்ளது.

பரிசுத்த வேதாகமத்திலே இயேசு கிறிஸ்து ஒருமுறை யூதர்களுடன் உரையாடிய போது நடந்தவற்றைப் பார்ப்போம்.

அன்றியும், தங்களை நீதிமான்களென்று நம்பி, மற்றவர்களை அற்பமாயெண்ணிய சிலரைக்குறித்து, அவர் ஒரு உவமையைச் சொன்னார்:

இரண்டு மனுஷர் ஜெபம்பண்ணும்படி தேவாலயத்திற்கு போனார்கள், ஒருவன் பரிசேயன், மற்றவன் ஆயக்காரன்.

பரிசேயன் நின்று: தேவனே! நான் பறிகாரர், அநியாயக்காரர், விபசாரக்காரர் ஆகிய மற்ற மனுஷரைப்போலவும்,  இந்த ஆயக்காரனைப்போலவும் இராததினால் உம்மை ஸ்தோத்ததிரிக்கிறேன். வாரத்தில் இரண்டுதரம் உபவாசிக்கின்றேன், என் சம்பாத்தியத்திலெல்லாம் தசம பாகம் செலுத்திவருகின்றேன் என்று, தனக்குள்ளே ஜெபம்பண்ணினான்.

ஆயக்காரன் தூரத்திலே நின்று, தன் கண்களையும் வானத்திற்கு ஏறெடுக்கத் துணியாமல், தன் மார்பிலே அடித்துக்கொண்டு: தேவனே! பாவியாகிய என்மேல் கிருபையாயிரும் என்றான்.

அவனல்ல, இவனே நீதிமானாக்கப்பட்டவனாய்த் தன் வீட்டுக்குத் திரும்பிப்போனான் என்று உங்களுக்குச் சொல்லுகிறேன், ஏனெனில் தன்னை உயர்த்துகிறவனெவனும் தாழ்த்தப்படுவான், தன்னைத் தாழ்த்துகிறவன் உயர்த்தப்படுவான் என்றார்.

பரிசேயர் எனப்படுவோர் யூத சமூகத்திலே உயர் நிலையிலுள்ள பக்திமான்கள் என்றும் ஆயக்காரர்கள் உரோம அரசிற்கு வரிசேர்ப்பவர்களும் பாவிகளும் என்று தரப்படுத்தப்பட்டவர்கள். இயேசு சொன்னார், அத்தரப்படுத்துதல் தேவனுக்குரியதல்ல. இவ்வுலகத்தில் தகுதி, மேன்மை எனப்படுவது சர்வ வல்லமையுள்ள தேவனுக்கு முன்பாக அழுக்கும் குப்பையுமாயுள்ளது. அவற்றினால் எவரும் தேவனுக்கு முன்பாக தகுதி அடைவதில்லை. அவை இவ்வுலக வாழ்வோடு மறைந்து போகும். ஓருவனுக்கு தேவனால் உண்டாகும் தகுதியானது இவ்வுலகிலும் மோட்சத்திலும் அவனை மேன்மை ப்படுத்தும். அந்தத்தகுதி என்னவென்றால் தேவன் ஓருவனுடைய பாவங்களை மன்னித்து அவனை நீதிமானாக்குவதே. அப்போது அவன் தேவனுடையவனாகின்றான். தேவனும் அவனை ஆசீர்வதித்து நடத்துவார்.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

நீ தேவனால் தகுதி பெற்று அவருடையவனாய் அவருடையவளாய் வாழவேண்டும், இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை வேண்டும், உனது வாழ்க்கையானது தேவனுக்கேற்றதாய் இருக்க வேண்டும் என்று விரும்பினால் பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து என்னை உம்முடைய பிள்ளையாய் எற்றுக் கொள்ளும் என்று கூறுவாயாக. இயேசு சொன்னார் “என்னிடத்தில் வருகிறவனை நான் புறம்பே தள்ளுவதில்லை.”