புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 03, 2026)

வேதமே மனமகிழ்ச்சி

சங்கீதம் 119:174

கர்த்தாவே, உம்முடைய இரட்சிப்பின்மேல் ஆவலாயிருக்கிறேன்; உம்முடைய வேதம் என் மனமகிழ்ச்சி.


சங்கீதம் 119 அதிகாரமானது, பரிசுத்த வேதாகமத்திலே நீண்ட அதிகாரமாக இருக்கின்றது. அந்த அதிகாரத்திலே 176 வசனங்கள் உண்டு. கர்த்தருடைய வேதம், கர்த்தருடைய சாட்சி, கர்த்தருடைய கற்பனைகள், கர்த்தருடைய நீதி நியாயங்கள், கர்த்தருடைய பிரமாணங்கள், கர்த்தருடைய வசனம், கர்த்தருடைய உண்மை, கர்த்தருடைய நன்மை போன்ற வார்த்தைகளில் ஒன்றை ஒவ்வொரு வசனங்களிலும் அடங்கிய சங்கீதமாக இருக்கின்றது. அந்த சங்கீதத்திலே, களிகூருவது பற்றியும், மனமகிழ்ச்சியாயிருப்பதைப் பற்றியும் இருப்பதைக் குறித்து கூறும் வசனங்கள் பல உண்டு. அவற்றுள் சில: 'உமது வேதம் என் மனமகிழ்ச்சியாயிராதிருந்தால், என் துக்கத்திலே அழிந்துபோயிருப்பேன்.' 'திரளான செல்வத்தில் களிகூருவதுபோல, நான் உமது சாட்சிக ளின் வழியில் களிகூருகிறேன்.' 'உமது கட்டளைகளைத் தியானித்து, உமது வழிகளைக் கண்ணோக்குகிறேன்.' 'உமது பிரமாணங்களில் மன மகிழ்ச்சியாயிருக்கிறேன்; உமது வசனத்தை மறவேன்.' 'நான் பிரியப்ப டுகிற உமது கற்பனைகளின்பேரில் மனமகிழ்ச்சியாயிருப்பேன்.' 'அவர் கள் இருதயம் நிணந்துன்னிக் கொழுத்திருக்கிறது' 'நானோ, உம்மு டைய வேதத்தில் மனமகிழ்ச்சியாயிருக்கிறேன். உம்முடைய சாட்சிகளை நித்திய சுதந்தரமாக்கிக்கொண்டிருக்கிறேன், அவைகளே என் இருதய த்தின் மகிழ்ச்சி.' மனமகிழ்சியான, சமாதானம் நிறைந்து, எல்லா சூழ்நிலைகளிலும் மனரம்மியமாக இருக்கும் வாழ்வானது கர்த்தருடைய வார்த்தைக்குள் அடங்கியிருக்கின்றது. அந்த வழியிலே வேதனைகள் இல்லை. இருளின் பதையிலே நடக்கின்றவர்கள், வழிதவறி, இடறி விழுந்து தங்களை உருவக் குத்திக் கொள்கின்றார்கள். ஆனால், பகலிலே நடக்கின்றவர்கள், போகும்பாதையை அறிந்திருக்கின்றார்கள். கர்த்தருடைய வசனம் விசுவாசிகளின் கால்களுக்குத் தீபமும், அவர்களின் பாதைக்கு வெளிச்சமுமாயிருக்கிறது. எனவே, அந்த வார்த்தைகளை வாசியுங்கள், அதை அனுதினமும் தியானியுங்கள். உங்கள் வாழ்விலே அவைகளை நடைமுறைப்படுத்துங்கள். அவைகளின் படி நடக்கின்றவர்கள் நஷ்டப்பட்டுப் போவதில்லை. அவர்களுடைய சந்ததி ஆசீர்பெற்ற சந்ததியாக இருக்கும். அந்த வார்த்தையிலே நித்திய ஜீவன் உண்டு. சத்திய வழியிலே நடத்தும் ஆவியானவர்தாமே உங்களோடு இருக்கின்றார். கர்த்தர் விளம்பிய வேதமே விசுவாசிகளின் வாழ்வின் மனமகிழ்சியாக இருக்கின்றது.

ஜெபம்:

வாழ்வு தரும் வார்த்தைகளை விளம்பிய தேவனே, என் ஆத்துமாவை உயிர்ப்பிக்கின்ற உம்முடைய குறைவற்ற வேதத்தின் வழியிலே நான் நடக்கும்படிக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தந்து என்னை வழி நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 112:1