புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 23, 2026)

உலகத்தை ஜெயித்த கிறிஸ்து

யோவான் 16:33

உலகத்தில் உங்களுக்கு உபத்திரவம் உண்டு, ஆனாலும் திடன்கொள்ளுங்கள்; நான் உலகத்தை ஜெயித்தேன் என்றார்.


நித்திய கனமகிமைக்கென்று அழைக்கப்பட்ட அருமையான விசுவாசிகளே, இன்று உங்கள் சந்தோஷத்தை கெடுக்கும் செய்தி என்ன? உங்கள் மனதை கவலைக்குள்ளாக்கும் காரியம் என்ன? இந்த உலகத்தில் வாழ்வதற்கு தேவையானவைகளை குறித்து கவலையடைகின்றீர்களா? எதிர்கால பயங்கள் உங்களை வாட்டுகின்றதா? 'என்னத்தை உண்போம், என்னத்தைக் குடிப்போம், என்னத்தை உடுப்போம் என்று கவலைப்படாதிருங்கள். இவைகளையெல்லாம் அஞ்ஞானிகள் நாடித்தேடுகிறார்கள்; இவைகளெல்லாம் உங்களுக்கு வேண்டி யவைகள் என்று உங்கள் பரமபிதா அறிந்திருக்கிறார். முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவரு டைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்க ளுக்குக் கூடக் கொடுக்கப்படும்' என்று ஆண்டவராகிய இயேசு கூறியி ருக்கின்றார். நீதி நியாயங்களின் நிமித்தம் துன்பப்பட்டு சோர்ந்து போகின்றீர்களா? நீதியினிமித்தம் துன்பப்படுகிறவர்கள் பாக்கியவான்கள்; பரலோகராஜ்யம் அவர்களுடையது. என்னிமித்தம் உங்களை நிந்தித்துத் துன்பப்படுத்தி, பலவித தீமையான மொழிகளையும் உங்கள் பேரில் பொய்யாய்ச் சொல்வார்களானால் பாக்கியவான்களாயிருப்பீர்கள்;. சந்தோஷப்பட்டு, களிகூருங்கள்; பரலோகத்தில் உங்கள் பலன் மிகுதியாயிருக்கும்; உங்களுக்கு முன்னிருந்த தீர்க்கதரிசிகளையும் அப்படியே துன்பப்படுத்தினார்களே என்று கூறியிருக்கின்றார். கடைசி நாட்களிலே வாழ்ந்து கொண்டிருக்கும் நீங்கள் துர்செய்திகளை கேட்டு கலங்கி போகாதிருங்கள். யுத்தங்களையும் யுத்தங்களின் செய்திகளையும் கேள்விப்படுவீர்கள்; கலங்காதபடி எச்சரிக்கையாயிருங்கள்; இவைகளெல்லாம் சம்பவிக்கவேண்டியதே. ஆனாலும், முடிவு உடனே வராது. ஜனத்துக்கு விரோதமாய் ஜனமும், ராஜ்யத்துக்கு விரோதமாய் ராஜ்யமும் எழும்பும்; பஞ்சங்களும், கொள்ளைநோய்களும், பூமியதிர்ச்சி களும் பல இடங்களில் உண்டாகும். நம்மை அழைத்தவரோ உண்மையுள்ளவர். அவர் எல்லாவற்றிலும் நமக்கு எல்லாமாக இருக்கின்றார். நாம் காண்கின்ற உலகம் அநித்தியமானது. அது போலவே, அதினால் உண்டாகும் உபத்திரவங்களும் துன்பங்களும் நீடித்திருக்காது. நித்திய கனமகிமையை நாடி சென்றுகொண்டிருக்கும் நமக்கு, இந்த உலகத்தின் வேஷம் அதி சீக்கிரத்தில் கடந்து போகும். எனவே கர்த்தருக்குள் சந்தோஷமாயிருங்கள்.

ஜெபம்:

உன்னதமாக தேவனே, நான் சோர்ந்துபோகாமல், என்னுடைய புறம்பான மனுஷனானது அழிந்தும், உள்ளான மனுஷனானது நாளுக்கு நாள் புதிதாகும்படி வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 6:34