புதிய நாளுக்குள்..

தியானம் (ஆடி 29, 2026)

நீங்கள் ஆவிக்குரியவர்கள்...

1 கொரிந்தியர் 6:2

உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா?


விசுவாசிகள் கிறிஸ்துவுக்குள் பரலோகத்திலே நித்திய ஜீவன் என்ற இலக்கின் ஒரே சிந்தையை தரித்திருக்க வேண்டும் என்பதைக் குறித்து தியானித்து வருகின்றோம். வேறு சிந்தைகள் யாவும் மாற்றப்பட வேண்டும். வேற்றுமைகள் யாவும், சாந்தமுள்ள ஆவியோடு தீர்க்கப்பட வேண்டும். அக்காலத்திலே, கொரிந்து சபையிலே விசுவாசிகள் சிலர் மத்தியிலே வேற்றுமைகள் உண்டாயிருந்தது. அதை தீர்த்து வைப்பதற்கு அவர்கள் வேறு வழிகளை தேடினார்கள். அந்த வேளையிலே தேவ ஊழியக் காரனாகிய பவுல்: 'உங்களில் ஒருவனுக்கு வேறொருவனோடே வழக்குண்டானால், வழக்காடும்படி அவன் பரிசுத்தவான்களிடத்தில் போகாமல், அநீதக்காரரிடத்தில் போகத் துணிகிறதென்ன? பரிசுத்தவான்கள் உல கத்தை நியாயந்தீர்ப்பார்களென்று அறியீர்களா? உலகம் உங்களால் நியாயந்தீர்க்கப்படுவதாயிருக்க, அற்ப வழக்குகளைத் தீர்க்க நீங்கள் அபாத்திரரா? தேவதூதர்களையும் நியாயந்தீர்ப்போமென்று அறியீர்களா? அப்படியிருக்க, இந்த ஜீவனுக்கேற்றவைகளை நீங்கள் தீர்த்துக் கொள்ளக்கூடாதிருக்கிறது எப்படி? இந்த ஜீவனுக்கேற்ற வழக்குகள் உங்களுக்கு இருந்தால், தீர்ப்புச்செய்கிறதற்கு, சபையில் அற்பமாய் எண்ணப்பட்டவர்களை நியமித்துக்கொள்ளுங்கள். உங்களுக்கு வெட்கம் உண்டாகும்படி இதைச் சொல்லுகிறேன். சகோதரனுக்கும் சகோதரனுக்கும் உண்டான வழக்கைத் தீர்க்கத்தக்க விவேகி ஒருவனாகிலும் உங்களுக்குள் இல்லையா? சகோதரனோடே சகோதரன் வழக்காடுகிறான், அவிசுவாசிகளுக்கு முன்பாகவும் அப்படிச் செய்கிறான். நீங்கள் ஒருவரோடொருவர் வழக்காடுகிறது எவ்விதத்திலும் குற்றமாயிருக்கிறது. அப்படிச் செய்கிறதைவிட நீங்கள் ஏன் அநியாயத்தைச் சகித்துக் கொள்ளுகிறதில்லை, ஏன் நஷ்டத்தைப் பொறுத்துக்கொள்ளுகிறதில்லை? நீங்களே அநியாயஞ்செய்கிறீர்கள், நஷ்டப்படுத்துகிறீர்கள்; சகோதரருக்கும் அப்படிச் செய்கிறீர்களே. அவர்களை கண்டித்து, ஆலோசனை கூறினார். நித்திய கன மகிமைக்கென்று அழைப்பை பெற்ற சகோதர சகோதரிகளே, நம்முடைய போராட்டம் ஆவிக்குரிய போராட்டம் என்பதை மறந்து போய்விடாதிருங்கள். அவற்றை உலகத்தின் போக்கின்படி தீர்த்து வைப்தற்கு முயற்சி செய்யாதிருங்கள். உலகமும், மாம்ச இச்சைகளின் முடிவும் கலகத்தையும், கசப்புக்க ளையும், சண்டைகளையும், பிரிவினையையும் பிறப்பிக்கும்.

ஜெபம்:

பரிசுத்த வாழ்க்கை வாழும்படி என்னை வேறு பிரித்த தேவனே, இந்த உலகத்திலே வாழும்வரை நான் ஞானமுள்ளவனாக நடந்து கொள்ளும்படி உம்முடைய வார்த்தையின் வெளிச்சத்திலே என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - சங்கீதம் 89:48