தியானம் (ஆவணி 22, 2026)
ஆசீர்வதிக்கப்பட்ட சந்ததி
2 கொரிந்தியர் 8:11
கொடுக்கவேண்டும் என்கிற விருப்பமுண்டாயிருந்ததுபோல, உங்களுக்கு உள்ளவைகளில் எடுத்து அதை நிறைவேற்றுதலும் உண்டாவதாக.
வாழ்வின் சமநிலைப் பிரமாணத்தைக் குறித்தும், மனப்பூர்வமான தான தர்மங்களைக்குறித்தும், தேவ ஊழியராகிய பவுல், கொரிந்து சபைக்கு எழுதிய 2ம் நிருபத்தின், 8ம் 9ம் வசனங்களிலே விரிவாக காணலாம். நாளைய வாழ்வின் நிலையைக் குறித்து நிச்சயமில்லாத இந்த உலகத்திலே, விசுவாசிகள், பிழைப்பூட்டுகின்ற பிதாவாகிய தேவனை நம்பி, அவருடைய வார்த்தையின்படி வாழ்வதே அவனுக்கு நலம். இன்று ஒருவேளை பெற்றோர் செழிப்புள்ளவர்க ளாக காணப்படலாம். அது தேவனுடைய ஆசீர்வாதம் என்று கூறிக் கொள்ளலாம். ஆனால், எதிர்காலத் திலே பிள்ளைகளுடைய நிலைமை என்ன? கர்த்தர் வர தாமதமானால், இன்னும் வரவிருக்கும் சந்ததியினருடைய நிலைமை என்ன? யார் அதை உறுதி செய்ய முடியும்? எனவே, இப்போதிருக்கின்ற காலத்திலே, தேவ வார்த்தையின்படி உங்கள் முதலீடுகளை செய்யுங்கள்! கர்த்தர் வழி நடத்துகின்ற பிரகாரமாக, ஊழியங்களை தாங்குங்கள். தேவ ஊழியங்களை தாங்க வேண்டும் என்னும் உண்மையான மனநிலை உண்டாயிருக்கும் போது, கர்த்தர் உங்களை நிச்சயமாக சரியான இடத்திற்கு வழிநடத்துவார். கோணலும் மாறுபாடுமான உலகத்தால் கறைபடாதபடிக்குத் தேவ வார்த்தையின்படி உங்களை காத்துக் கொண்டு, திக்கற்ற பிள்ளைகளும் விதவைகளும் படுகிற உபத்திரவத்திலே அவர்களை விசாரியுங்கள். இப்போது உண்டாயிருக்கும் பொளாதாரத்திலே நம்பி கிரியைகளை நடப்பிக்காமல், காலங்களை அறிந்த சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தரை சார்ந்து வாழ்பவன், ஞானமுள்ள பிள்ளையாக இருக்கின்றான். தேவ ஊழியராகிய பவுல், கொரிந்து சபையோருக்கு கூறியது போல, 'மற்றவர்களுக்குச் சகாயமும் உங்களுக்கு வருத்தமும் உண்டாகும்படியல்ல, சமநிலையிருக்கும்படியாகவே சொல்லுகிறேன். எப்படியெனில், மிகுதியாய்ச் சேர்த்தவனுக்கு அதிகமானதுமில்லை, கொஞ்சமாய்ச் சேர்த்தவனுக்குக் குறைவானதுமில்லை என்று எழுதியிருக்கிறபிரகாரம், சமநிலைப் பிரமாணத்தின்படியே, அவர்களுடைய செல்வம் உங்கள் வறுமைக்கு உதவும்படிக்கு இக்காலத்திலே உங்களுடைய செல்வம் அவர்களுடைய வறுமைக்கு உதவுவதாக.' 'கர்த்தருக்குப் பயந்து, அவருடைய கட்டளைகளில் மிகவும் பிரியமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்.'
ஜெபம்:
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, இரங்கிக் கடன்கொடுத்து, தன் காரியங்களை நியாயமானபடி நடப்பிக்கிற பாக்கியமுள்ள மனுஷனைப் போல வாழ உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 112:1-10