தியானம் (சித்திரை 09, 2026)
இருதயமும் வாயும்
லூக்கா 6:45
இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும்.
ஒரு கிராமத்திலே வசித்து வந்த விதவையாக இருந்த தாயார், தன் ஒரே மகனானவனின் எதிர்காலத்திற்காக அயராது உழைத்து வந்தாள். மகனாவனும் வளர்ந்து உயர்கல்வியை முடித்து, மேற்படிக்காக பட்டணத்திலுள்ள பல்கலைகழகத்திற்கு சென்று, அதி விசேஷட சித்தியுடன் பட்டப்படிப்பை முடித்து, நல்ல உத்தியோகத்திலே உயர் பதவியிலே அமர்ந்து கொண்டான். ஒருநான் அவனை சந்திக்கும்படிகயாக தயார் பட்டணத்திற்கு சென்றிருந்தாள். அவளுடைய எளிமையான வாழ்க்கையினாலும், வறுமையினாலும், கடின உழைப்பினாலும், அவளுடைய தோற்றும் விரும்பத்தக்கதாக இல்லாதிருந்தது. தாயாரை கண்ட, மகனானவன், சற்று தயமடைந்தான். சக ஊழியர் மத்தியிலே அவளை தன் தாயார் என்று கூறாமல், வீட்டிலே உதவிக்காக இருக்கும் உறவினர் என்று கூறிக்கொண்டான். இதற்கொத்த சம்பவங் கள் நடைபெற்றதை நீங்களும் அறிந்திருக்கலாம். மேற்கூறிய சம்பவத்திலே, அந்த மகனாவனின் மனம் நல்லதல்ல என்று கூறிவீர்களா? அல்லது அவன் வாயின் வார்த்தை சரியில்லை என்று கூறுவீர்களா? சற்று சிந்தித்துப் பாருங்கள். நல்லமனம் இல்லாதவர்கள், சிலவேளைகளிலே மற்றவர்கள் முன்னிலையிலே நல்ல நடிகர்களாக மாறிவிடுகின்றார்கள். அவ்வண்ணமாக தங்களை விசுவாசிகள் என்று சொல்லிக் கொண்டு, மாய்மாலமான வாழ்க்கை வாழ்பவர்களும், தங்கள் வாயின் வார்த்தைகளினாலே மனம்குளிர பேசுகின்றவர்களைப் போல இனிமையான வார்த்தைகளை பேசிக் கொள்ளலாம். ஆனால், ஒருநாள் மனதிலுள்ளவை கள் வாயினாலே வெளிப்படும். இப்படியாக சொந்தக் குடும்பத்தை மட்டுமல்ல, தங்களுக்காக தன் ஜீவனைக் கொடுத்த இயேசுவையும் தங்கள் சொந்த இரட்சகர் என்று மற்றவர்கள் முன் அறிக்கை செய்ய வெட்கடைவர்களும் உண்டு. உலகத்தார் முன்னிலையில் அவர்களுக்கு ஏற்றபடி பேசிக் கொள்வார்கள். இது கபடுள்ள வாழ்க்கை. மாசு நிறைந்த உள்ளம். சில வேளைகளிலே, 'அவன் நல்லவன் ஆனால் அவன் வாய் சரியில்லை' என்று விசுவாசிகள் கூறுவதை கேட்டிருப்பீர்கள். நல்ல மனுஷன் தன் இருதயமாகிய நல்ல பொக்கிஷத்திலிருந்து நல்லதை எடுத்துக் காட்டுகிறான்; பொல்லாத மனுஷன் தன் இருதயமாகிய பொல்லாத பொக்கிஷத்திலிருந்து பொல்லாததை எடுத்துக்காட்டுகிறான்;. இருதயத்தின் நிறைவினால் அவனவன் வாய் பேசும். எனவே உங்கள் இருதயமானது கிறிஸ்துவைப் போல மனத்தாழ்மையும், கீழ்படிவுள்ளதாகவும் இருப்பதாக.
ஜெபம்:
உள்ளந்திரயங்களை ஆராய்து அறியும் தேவனே, என் வாயின் வார்த்தைகளும் என் இருதயத்தின் தியானங்களும் உமது சமுகத்திலே ஏற்புடையதாக இருக்கும்படி உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்தி செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - சங்கீதம் 19:14