தியானம் (பங்குனி 14, 2026)
இரட்சிப்புக்கு பாத்திரன் யார்?
ரோமர் 3:23-24
எல்லாரும் பாவஞ்செய்து, தேவ மகிமையற்றவர்களாகி, இலவசமாய் அவருடைய கிருபையினாலே கிறிஸ்து இயேசுவிலுள்ள மீட்பைக்கொண்டு நீதிமான்களாக்கப்படுகிறார்கள்;
ஆண்டவராகிய இயேசுவை சொந்த இரட்சகராக ஏற்றுக் கொள்ள முதலிருந்த எங்களுடைய நிலைமை என்ன? எபேசியர் 2ம் அதிகாரம் 1ல் இருந்து 3 வரை இப்படியாக கூறப்பட்டிருக்கின்றது: 'அக்கிரமங்களினாலும் பாவங்களினாலும் மரித்தவர்களாயிருந்த உங்களை உயிர்ப்பித்தார். அவைகளில் நீங்கள் முற்காலத்திலே இவ்வுலக வழக்கத்திற் கேற்ற படியாகவும், கீழ்ப்படி யாமையின் பிள்ளைகளிடத்தில் இப்பொழுது கிரியைசெய்கிற ஆகாயத்து அதிகாரப் பிரபுவாகிய ஆவிக்கேற்றபடியாகவும் நடந்துகொண்டீர்கள். அவர்களுக்குள்ளே நாமெல் லாரும் முற்காலத்திலே நமது மாம்ச இச்சையின்படியே நடந்து, நமது மாம்சமும் மனசும் விரும்பினவைகளைச் செய்து, சுபாவத்தினாலே மற்றவர்களைப் போலக் கோபாக்கினையின் பிள்ளைகளாயிருந்தோம்.' அதாவது இரட்சிப்படைவதற்கேதுவாக எங்களிடம் எந்த தகுதியும் இருந்ததில்லை. அதாவது, பாதிரம் அறிந்து அவர் இரட்சிப்பை கொடுப்பதற்கு ஒருவனும் தேவனுக்கு உகந்த பாதிரமாக இருக்கவில்லை. 'நாம் செய்த நீதியின் கிரியைகளினிமித்தம் அவர் நம்மை இரட்சியாமல், தமது இரக் கத்தின்படியே, மறுஜென்மமுழுக்கினாலும், பரிசுத்த ஆவியினுடைய புதிதாக்குதலினாலும் நம்மை இரட்சித்தார்.' இது தேவனுடைய கிருபை. அவருடைய ஈவு. 'ஒருவரும் பெருமைபாராட்டாதபடிக்கு இது கிரியைகளினால் உண்டானதல்ல'. அந்த ஈவை பெற்ற பின்பும், யாவரும் அதற்கு பாத்திரர்களாக நடந்து கொள்கின்றார்களா? தேவ ஊழியராகிய பவுல் தாமே: எவ்விதத்திலும் நீங்கள் கிறிஸ்துவின் சுவிசேஷத்திற்குப் பாத்திரராகமாத்திரம் நடந்துகொள்ளுங்கள் என்று பிலிப்பி சபையோரை வேண்டிக் கொண்டத்தை முதலாம் அதிகாரத்திலே பார்த்தோம். நீங்கள் பெற்றுக் கொண்ட இரட்சிப்பின் சுவிசேஷத்திற்கு பாதிரர்களாக நடந்து கொள்கின்றீர்களா? என்று சற்று உங்களையே நீங்கள் ஆராய்ந்து பாருங்கள். எத்தனை முறை மனம்வருந்தி மன்னிப்பை கேட்டுக் கொண்டீர்கள்? மன்னிப்பு கேட்டுக் கொள்வது உங்கள் வாழ்விலே முடிவடைந்து விட்டாதா? எனவே, பாத்திரம் அறிந்து உதவி செய்ய வேண்டும் என்னும் கருத்தை குறித்து உண்மையும் நீதியுமுள்ளவர்களாக இருங்கள். சீக்கிரமாய் நியாயந்தீர்க்காமல் நீங்கள் பெற்றுக் கொண்ட இரக்கத்தை காண்பிபுங்கள்.
ஜெபம்:
இரக்கத்தில் ஐசுவரியமுள்ள தேவனே, உதவி செய்யாமல் இருப்பதற்கு காரணங்களை தேடுகின்றவனாக நான் இருக்காமல், உம்மைப்போல மாற எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - பிலிப்பியர் 1:27