புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 07, 2026)

மனத்தாழ்மையோடு சேவியுங்கள்

1 யோவான் 1:3

எங்களுடைய ஐக்கியம் பிதாவோடும் அவருடைய குமாரனாகிய இயேசுகிறிஸ்துவோடும் இருக்கிறது.


பிலிப்பி சபையோர் மத்தியிலே பல நற்பண்புகள் இருந்தது. அவர்கள் சிலர் சுவிசேஷத்திற்காக பிரயாசப்பட்டவர்கள். ஆனால், அவர்கள் மத்தியிலே பிரிவினைகளும்; இருந்தது. இந்த நிரூபத்தின் ஆரம்பத்திலே, தன்னுடைய நிலைமையைக் குறித்து தேவ ஊழியராகிய பவுல் எழுதும் போது, 'சிலர் பொறாமையினாலும் விரோதத்தினாலும், சிலர் நல்மனதி னாலும் கிறிஸ்துவைப் பிரசங்கிக்கிறார்கள்.' என்று குறிப்பிட்டிருந்தார். அதாவது, சிலர் தவறான எண்ணத்தோடு, போட்டி பொறாமையோடு, நன்மைகள் செய்ய நாடினார்கள். அப்படிப்பட்ட மனநிலையானது பிலிப்பு சபையோர் மத்தியிலும் காணப்பட்டது. வாதினாலாவது, வீண் பெருமையினாலாவது, நன்மையானவைகளை செய்யாமல், மனத்தாழ்மையோடு நற்கிரியைகளை நடப்பிக்கும்படி புத்தி சொல்லியிருக்கின்றார். ஏனெனில், வன்மம், கசப்பு போன்ற மாம்ச சிந்தைகள், பிரிவினையை உண்டாக்கும். பிரிவினையானது கலகங்களையும், சண்டைகளையும் பிறப்பிக்கும். எனவே, போராட்டங்களை பற்றி அறிந்த நீங்கள், அவைகள் உள்ளே இருந்து உடன் விசுவாசிகளால் வந்தாலும், வெளியேயிருந்து உலகத்தாரால் வந்தாலும், ஒருமனத்தையும், ஒற்றுமையையும் விட்டுவிடக்கூ டாது. சரீரத்திலே அநேக அவயவங்கள் உண்டு. அவையொன்றிற்கும் வெவ்வேறான செயற்பாடுகள் இருக்கின்ற போதும், அவை ஒருமித்து செயற்படாதவிடத்து, அதை ஆரோக்கியமான சரீரம் என்று கூற முடி யாது. குறைகளை காணும் போது, கிறிஸ்துவின் ஆறுதலையும், தேறுதலையும், உருக்கமான இரக்கத்தையும் பற்றி அனுபவித்த நீங்கள், அதை உங்கள் சக விசுவாசிகளுக்கு காண்பியுங்கள். பாரங்களோடு இன்னும் பாரங்களை ஏற்றாமல், ஒருவர் பாரத்தை ஒருவர் சுமந்து, கிறிஸ்துவின் பிரமாணத்தை நிறைவேற்ற வேண்டும். நான் ஆளும் கட்சி, அவன் எதிர்கட்சி என்ற பிரகாரமாக கிறிஸ்துவின் சபையானது இருக்கக் கூடாது. பக்கச்சார்பில்லாமல், யாவரும் கிறிஸ்துவை சார்ந்தவர்களாக இருக்க வேண்டும். கிறிஸ்துவை சார்ந்தவர்கள், அவருடைய சாயலிலே வளரவேண்டும். நம்முடைய ஐக்கியமானது, உலக கொள் கைகளின்படியல்ல, பிதா குமாரன் வழியாக ஏற்படுத்தப்பட வேண்டும். எனவே, வேறுபட்ட மனநிலைகளை களைந்துவிட்டு, வார்த்தையிலே நிலைத்திருந்து, அழைப்பின் நோக்கத்தை மறந்து போகாமல், முன்னேறிச் செல்லக்கடவோம்.

ஜெபம்:

வார்த்தையிலே நிலைத்திருங்கள் என்று கூறியே தேவனே, உம்முடைய வேதத்தை இந்த உலகத்தின் கண்களால் பார்க்காமல், ஆவிக்குரிய கண்களால் பார்க்க பிரகாசமுள்ள மனக்கண்களை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 2:3