புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 19, 2025)

ஆரோக்கியமான ஆலோசனைகள்

சங்கீதம் 1:2

கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக் கியவான்.


வாழ்விலே எதிர்பாராத இடங்களிலே இருந்து நெருக்கங்கள் ஏற்படும் போது, அவை மனதிலே தாங்கொண்ணா வேதனையை உண்டாக்கிவிடுகின்றது. துன்மார்க்கரிடம் இருந்து வரும் தீவினைகளை கண்டு மனிதர்கள் ஆச்சரியப்படுவதில்லை. பாவிகளுடைய வழியில் அலங்கோலங்க ளை காணும் போது, அவனிடமிருந்து வேறு என்னத்தை எதிர்பார்கலாம் என்று கூறிக் கொள்வார்கள். பரியாசக்காரரின் வாயின் வார்த்தைகளை மனிதர்கள் கேட் கும் போது, பானையிலுள்ளது தான் அகப்பையிலே வரும் என்று சொல்லிக் கொள்வார்கள். ஆனால், விசுவாச மார்க்கத்தார் என்று தங்களை சொல்லி கொண்டு வாழும் மனிதர்களிடமிருந்து நெருக்கங்கள் ஏற்படும் போது, அதனால் உண்டாகும் நோவு அதிகமாக இருக்கும் அல்லவா? அந்த வேளையிலே, விசுவாசிகள் தங்களுக்கு பிரியமானவர்கள் அல்லது ஆதரவாயிருப்பவர்களை நாடித் தேடுகின்றார்கள். அவர்கள் கூறும் இனிய வார்த்தைகளை ஒருவேளை அவர்கள் மனதிற்கு தற்காலிகமான விடுதலையை உண்டாக்குகின்றது. பிரியமான சகோதர சகோதரிகளே ஆலோசனைகளை நாடித் தேடுவது, சில சந்தர்பங்களிலே அவசியமானது. ஆனால், நமக்கு ஆலோசனை கூறுகின்ற வர்கள், தங்கள் வாழ்விலே எந்த சூழ்நிலையிலும், தங்களுக்கு நஷ்டம் ஏற்பட்டாலும், அசையாமல் உறுதியாய் இருந்து, கர்த்தர் சத்திய வார்த்தைகளை சுத்தமாக பேசுகின்றவர்களிடமிருந்தே ஆலோசனையை பெற்றுக் கொள்ள வேண்டும். 'குருடனுக்குக் குருடன் வழிகாட்டினால் இருவரும் குழியிலே விழுவார்களே' என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். தொல்லைகள், கஷ்டங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, எங்களைவிட அதிகமாக மனக் குழப்பத்திலே இருக்கின்றவர்களிடம் ஆலோசனைக்கு சென்றால், குருடனுக்கு குருடன் வழிகாட்டுவதைப் போலவே மாறிவிடும். எனவே, நாம் தவறான ஆலோசகர்கள் அல்லது கள்ளப் போதகர்கள் போன்றவர்களிடம் அகப்படாதபடிக்கு, தேவனுடைய பாதத்திலிருந்து, வேதத்தை தியானித்து, ஜெபிக்க கற்றுக் கொள்ள வேண்டும். தியானமும், ஜெபம் நம் அனுதின வாழ்விலே நடைமுறையில் இல்லாவிட்டால், பெரும் புயலானது நம் வாழ்க்கை படவிலே மோதி அடிக்கும் போது, நாம் தவறான தீர்மானங்களை எடுத்துக் கொள்ள நேரிடும். எனவே கர்த்தருடைய வேதத்திலே இரவும் பகலும் தியானமாயிருங்கள். ஊக்கமாக ஜெபம் செய்யுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம்மிடத்திலே நான் ஆலோசனையை பெற்றுக் கொள்ளும்படியாக, உம் வார்த்தைகளை தியானித்து, அவைகளினல் நிலைந்து, ஏற்ற காலத்திலே கனியை கொடுக்கும்படிக்கு என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 6:39