புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 07, 2026)

மனதை குழப்பும் காரியங்கள் என்ன?

மத்தேயு 11:28

வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்.


தேவனாகிய கர்த்தர் தாமே, தாம் தெரிந்து கொண்ட தம்முடைய ஜனங்களை நோக்கி: 'நான் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து, உன்னை எடுத்து, அதின் எல்லைகளிலிருந்து அழைத்துவந்து: நீ என் தாசன், நான் உன்னைத் தெரிந்துகொண்டேன், நான் உன்னை வெறுத்துவிடவில்லை என்று சொன்னேன். நீ பயப்படாதே, நான் உன்னுடனே இருக் கிறேன்; திகையாதே, நான் உன் தேவன்; நான் உன்னைப் பலப்படுத்தி உனக்குச் சகாயம்பண்ணுவேன்; என் நீதியின் வலதுகரத்தினால் உன்னைத் தாங்குவேன்.' (ஏசாயா 41:10) கிறிஸ்து இயேசுவுக் குள்ளாக நாமும் தெரிந்து கொள்ளப்பட்ட சந்ததியாயும், ராஜரீகமான ஆசாரியக்கூட்டமாயும், பரிசுத்த ஜாதியாயும், அவருக்குச் சொந்தமான ஜனமாயும் இருக்கி ன்றோம். உங்கள் சொந்த வாழ்க்கையிலே உங்களை கலங்க வைக்கும் காரியம் என்ன? உங்கள் குடும்பத்திலே உங்களை துக்கப்படுத்தும் காரியம் என்ன? வேலை செய்யும் இடத்திலே உங்களுக்கு பிரச்சனை உண்டாகும் காரியங்கள் என்ன? சபை ஐக்கியத்திலே உங்களை குழப்பும் காரியம் என்ன? நித்திய ஜீவனுக்கென்று அழைப்பை பெற்ற அருமையான சகோதர சகோதரிகளே, நீங்கள் உங்கள் அழைப்பை மறந்து விட்டீர்களா அல்லது உங்களை அழைத்தவர் இன்னார் என்பதை மறந்து விட்டீர்களா? அவர் தம்முடைய ஜனங்களை நோக்கி: 'பூமியின் கடையாந்தரங்களைச் சிருஷ்டித்த கர்த்தராகிய அநாதி தேவன் சோர்ந்துபோவதுமில்லை, இளைப்படைவதுமில்லை; இதை நீ அறியாயோ? இதை நீ கேட்டதில்லையோ? அவருடைய புத்தி ஆரா ய்ந்து முடியாதது. சோர்ந்துபோகிறவனுக்கு அவர் பெலன் கொடுத்து, சத்துவமில்லாதவனுக்குச் சத்துவத்தைப் பெருகப்பண்ணுகிறார். இளைஞர் இளைப்படைந்து சோர்ந்துபோவார்கள், வாலிபரும் இடறிவிழுவார்கள். கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழு குகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.' (ஏசாயா 40:28-31). உங்களையும் பூமியின் கடையாந்தரங்களிலிருந்து பிரித்தெடுத்தவர், பூமியின் கடையாந்தரங்களை சிருஷ்டித்தவர் என் பதை அறிந்து கொள்ளுங்கள். அவரே உங்களை தெரிந்து கொண்டவர். அவர் சர்வ வல்லமையுள்ளவர்! அவர் தம்முடைய வாக்கிலே உண்மை யுள்ளவர்.

ஜெபம்:

உன்னதமான தேவனே, நீர் என்னை அழைத்த அழைப்பின் மேன்மையை உணர்ந்தவனாக, உம் வார்த்தையிலே உறுதியாய் நிலை த்திருந்து, கனி கொடுக்கும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - ரோமர் 15:33