புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 07, 2025)

உள்ளத்திலிலுந்து புறப்படுபவைகள்

மாற்கு 7:14

பின்பு இயேசு ஜனங்களெல்லாரையும் வரவழைத்து அவர்களை நோக்கி: நீங்கள் எல்லாரும் எனக்குச் செவிகொடுத்து உணருங்கள்.


ஒரு சமயம் 'பரிசேயரும் வேதபாரகரும் ஆண்டவர் இயேசுவை நோக்கி: உம்முடைய சீஷர்கள் முன்னோர்களின் பாரம்பரியத்தை மீறி, ஏன் கை கழுவாமல் சாப்பிடுகிறார்கள் என்று கேட்டார்கள். அவர்களுக்கு அவர் பிரதியுத்தரமாக: இந்த ஜனங்கள் தங்கள் உதடுகளினால் என்னைக் கனம்பண்ணுகிறார்கள்; அவர்கள் இருதயமோ எனக்குத் தூரமாய் விலகியிருக்கிறது என்றும், மனுஷருடைய கற்பனைகளை உபதேசங்களாகப் போதித்து, வீணாய் எனக்கு ஆரா தனை செய்கிறார்கள் என்றும், எழுதியிருக்கிறபிரகாரம், மாயக்காரராகிய உங்களைக்குறித்து, ஏசாயா நன்றாய்த் தீர்க்கதரிசனம் சொல்லியிருக்கிறான். நீங்கள் தேவனுடைய கட்டளையைத் தள்ளிவிட்டு, மனுஷருடைய பாரம்பரியத்தைக் கைக்கொண்டுவருகிறவர்களாய், கிண்ணங்களையும் செம்புகளையும் கழுவுகிறீர்கள்; மற்றும் இப்படிப்பட்ட அநேக சடங்குகளையும் அனுசரித்து வருகிறீர்கள் என்றார். பின்னும் அவர் அவர்களை நோக்கி: நீங்கள் உங்கள் பாரம்பரியத்தைக் கைக்கொள்ளும்படிக்கு தேவனுடைய கட்டளைகளை வியர்த்தமாக்கினது நன்றாயி ருக்கிறது. எப்படியெனில், உன் தகப்பனையும் உன் தாயையும் கனம் பண்ணுவாயாக என்றும், தகப்பனையாவது தாயையாவது நிந்திக்கிறவன் கொல்லப்படவேண்டும் என்றும், மோசே சொல்லியிருக்கிறாரே. நீங்களோ, ஒருவன் தன் தகப்பனையாவது தாயையாவது நோக்கி: உனக்கு நான் செய்யத்தக்க உதவி எது உண்டோ, அதைக் கொர்பான் என்னும் காணிக்கையாகக் கொடுக்கிறேன் என்று சொல்லிவிட்டால் அவனுடைய கடமை தீர்ந்தது என்று சொல்லி, அவனை இனி தன் தகப்பனுக்காவது தன் தாய்க்காவது யாதொரு உதவியும் செய்ய ஒட்டாமல்; நீங்கள் போதித்த உங்கள் பாரம்பரியத்தினால் தேவ வசனத்தை அவமாக்குகிறீர்கள். இதுபோலவே நீங்கள் மற்றும் அநேக காரியங்களையும் செய்கிறீர்கள் என்று சொன்னார்.' அன்று மட்டுமல்ல இன்றும் விசுவாசிகள் என்று தங்களை அழைத்துக் கொள்ளும் சிலர், வெளியரங்கமான கிரியைகளிலே சுத்தமாக இருக்க விரும்புகின்றார்கள். ஆனால், ஆன்மீக இரட்சிப்புக்குரியதும், மறுரூபமாகுதலுக்குரியதுமான நற்கிரியைகளை தங்கள் வாழ்க்கையில் மறந்து மற்றவர்களுடைய வாழ்விலே குறைகளை கண்டுபிடிக்க முந்திக் கொள்கின்றார்கள். நீங்களோ அப்படியிராமல் உணர்வுள்ளவர்களாய் நடந்து கொள்ளுங்கள்.

ஜெபம்:

பரலோக தேவனே, உம் வார்த்தையை கேட்டு நான் உணர்வடைந்து, உள்ளத்திலிருந்து புறப்படுகிறவைகளை குறித்து எச்சரிக்கையுள்ளவனாக இருக்கும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்தருள்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - லூக்கா 8:18