புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 17, 2026)

கிறிஸ்துவை பற்றிக் கொள்ளுங்கள்!

1 கொரிந்தியர் 1:13

கிறிஸ்து பிரிந்திருக்கிறாரா? பவுலா உங்களுக்காகச் சிலுவையிலறையப்பட்டான்? பவுலின் நாமத்தினாலேயா ஞானஸ்நானம் பெற்றீர்கள்?


வனாந்திர யாத்திரைக்கு ஒப்பாக இருக்கும் இந்த வாழ்க்கையிலே முன்னோடிகளாக செல்லும் வழிகாட்டிகளின் ஆதரவை பெற்றுக் கொள்வது நல்லது. அதாவது, பண ஆசையில்லாதவர்களாய், இயேசு கிறிஸ்துவிலே உறுதியாய் நிலைத்திருந்து, சாட்சியான வாழ்க்கை வாழ்பவர்களின் ஆலோனைகளை பெற்றுக் கொள்வது நல்லது என்பதை குறித்து சத்திய வேதத்திலும் நாம் வாசிக்கலாம். ஆனால், இன்று சிலர், சில மனிதர்களை தங்கள் விக்கிரகங்களாக மாற்றிவிடுகின்றார்கள். இன்னார் எனக்கு ஜெபிக்க வேண்டும். அவர்தான் என் வழிகாட்டி, அவருக்கு தான் நான் ஆதரவு கொடுப்பேன் என்று உலகத்தார் சில நட்சத்திரங்களுக்கு இரசிகர்களாக இருப்பதைப் போல மாறிவிடுகின்றார்கள். அதாவது, ஆண்டவராகிய இயேசு ஒருவரே மத்தியஸ்தர் என்ற சத்தியத்தைவிட்டு விலகி விடுகின்றார்கள். நாம் அப்போஸ்தலராகிய பவுல், பிலிப்பியருக்கு எழுதிய நிரூபத்தை ஆராய்ந்து தியானித்து வருகின்றோம். தேவ ஊழியராகிய பவுல், தன்னை பின்பற்றும்படி கூறாமல், தான் எப்படியாக கிறிஸ்துவை பற்றிக் கொண்டு இருக்கின்றேனோ, அதுபோலவே நீங்களும் கிறிஸ்துவை அறிந்து பற்றிக் கொள்ள வேண்டும் என்று வலியுறுத்துகின்றார். கொரிந்து பட்டணத்திலுள்ள சபையிலே, இவ்வண்ணமாக விசுவாசிகள் மனிதர்களை சார்ந்து வாழ ஆரம்பித்தார்கள். தேவ ஊழியராகிய பவுல் அவர்களை கண்டித்து கூறியதாவது: 'ஒருவன் நான் பவுலைச் சேர்ந்தவனென்றும், வேறொருவன் நான் அப்பொல்லோவைச் சேர்ந்தவனென்றும் சொல்லுகிறபடியால் நீங்கள் மாம்சத்திற்குரியவர்களல்லவா? பவுல் யார்? அப்பொல்லோ யார்? கர்த்தர் அவனவனுக்கு அருள் அளித்தபடியே நீங்கள் விசுவாசிக்கிறதற்கு ஏதுவாயிருந்த ஊழியக்காரர் தானே. நான் நட்டேன், அப்பொல்லோ நீர்ப்பாய்ச்சினான், தேவனே விளையச்செய்தார். அப்படியிருக்க, நடுகிறவனாலும் ஒன்றுமில்லை, நீர்ப்பாய்ச்சுகிறவனாலும் ஒன்றுமில்லை, விளையச்செய்கிற தேவனாலே எல்லாமாகும்.' என்று கூறியிருக்கின்றார். எனவே, நல்ல ஊழியர்களை பின்பற்றுவதென்பது, அவர்களை தேவனுடைய ஸ்தானத்திற்கு உயர்த்தி வைப்பதல்ல. மாறாக, அவர்களைப்போல நாமும் ஆண்டவர் இயேசுவை பற்றிக் கொண்டு, அவருடைய வார்த்தையின் வழியிலே வாழ பழகிக்கொள்ள வேண்டும். எவரும் மத்தியஸ்தர்களாக முடியாது. கிறிஸ்து ஒருவரே மத்தியஸ்தர்.

ஜெபம்:

என்னை நல் வழியிலே நடத்தும் தேவனே, உம்மைப் பின்பற்றி வெற்றி வாழ்க்கை வாழ்ந்த மனிதர்களைப் போல, நானும் உம்மைப்பற்றிக் கொண்டு உம் வார்த்தையின் வழியிலே வாழ எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தீமோ 2:5