தியானம் (தை 01, 2026)
தேவ கிருபை என்றுமுள்ளது!
சங்கீதம் 118:29
கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது.
எத்தனை ஆண்டுகளை கடந்து வந்திருக்கின்றோம்! இன்னுமொரு புதிய ஆண்டிலே பிரவேசிக்கும் நாம், தேவனாகிய கர்த்தருடைய கிருபையும், இரக்கத்தையும் குறித்து என்ன சொல்ல முடியும்? அவருடைய கிருபை என்றுமுள்ளது. அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை! எனவே, துதியோடும் புகழ்சியோடும் இந்த ஆண்டை நாம் நம் வாழ்விலே வர வேற்போமாக! கர்த்தரைத் துதியுங்கள், அவர் நல்லவர்; அவர் கிருபை என்றுமுள்ளது. இருப்பதற்கு ஒரு வீடு உண்டு. பணத்தை சம்பாதிக்க ஒரு வேலையுண்டு. நல்ல குடும்பமும் உறவுகளும் நண்பர்களும் உண்டு. இந்த ஆண்டிற்குரிய நல்ல திட்டம் உண்டு. ஆதலால், நான் சுகமாய் திருப்பதியாய் சுகித்திருப்பேன் என்று அவற்றைக் குறித்து யார்தான் உறுதியாக கூற முடியும்? நாளைய தினத்தை குறித்து எந்த மனுஷனால் பெருமை பாராட்ட முடியும்? எந்த மனுஷனாலும் அதை உறுதிப்படுத்த முடியாது. மனுஷனானவன், உயர்ந்தவானாகவோ தாழ்ந்தவனாகவோ இருந்தாலும் அவன் பெலன் மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கின்றது. அவனுடைய ஆவி பிரியும், அவன் தன் மண்ணுக்குத் திரும்புவான்; அந்நாளிலே அவன் யோசனைகள் அழிந்து போம். 'மனுஷனை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர் பேரில் பற்றுதலா யிருப்பதே நலம். பிரபுக்களை நம்புவதைப்பார்க்கிலும், கர்த்தர்பேரில் பற்றுதலாயிருப்பதே நலம்.' 'யாக்கோபின் தேவனைத் தன் துணையாகக் கொண்டிருந்து, தன் தேவனாகிய கர்த்தர்மேல் நம்பிக்கையை வைக்கிறவன் பாக்கியவான்.' அவன் தன் வாழ்விலே நல்ல பங்காகிய தேவ வார்த்தைகளை தெரிந்து கொண்டு, அதை பற்றிக் கொண்டு வாழ்வதால், அவன் ஆபத்தை கண்டு அஞ்சமாட்டான். 'அவர் வானத்தையும் பூமியையும் சமுத்திரத்தையும் அவைகளிலுள்ள யாவையும் உண்டாக்கினவர்; அவர் என்றென்றைக்கும் உண்மையைக் காக்கிறவர். அவர் ஒடுக்கப்பட்டவர்களுக்கு நியாயஞ்செய்கிறார்; பசியாயிருக்கிறவர்களு க்கு ஆகாரங் கொடுக்கிறார்; கட்டுண்டவர்களைக் கர்த்தர் விடுதலையாக்குகிறார். குருடரின் கண்களைக் கர்த்தர் திறக்கிறார்; மடங்கடிக்கப்ப ட்டவர்களைக் கர்த்தர் தூக்கிவிடுகிறார்; நீதிமான்களைக் கர்த்தர் சிநேகிக்கிறார். பரதேசிகளைக் கர்த்தர் காப்பாற்றுகிறார்; அவர் திக்கற்ற பிள்ளையையும் விதவையையும் ஆதரிக்கிறார்; துன்மார்க்கரின் வழியையோ கவிழ்த்துப்போடுகிறார். கர்த்தர் சதாகாலங்களிலும் அரசாளுகிறார்; சீயோனே, உன் தேவன் தலைமுறை தலைமுறையாகவும் ராஜரிகம்பண்ணுகிறார். அல்லேலூயா.'
ஜெபம்:
என் பெலனும், என் கீதமும், எனக்கு இரட்சிப்புமானா தேவனாகிய கர்த்தாவே, உம்முடைய கிருபைக்கும் இரக்கத்திற்கும் நன்றி. உம்முடைய வார்த்தையிலே நிலைத்திருக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - சங்கீதம் 118:15