தியானம் (மார்கழி 23, 2025)
மரித்தாலும் பிழைப்பான்....
யோவான் 11:25
நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;
பெத்தானியா என்னும் ஊரிலே, மார்த்தாள் மரியாள் என்னும் இரு சகோதரிகளும், அவர்களுடைய சகோதரனான லாசருவும் வாழ்ந்து வந்தார்கள். அவர்கள் ஆண்டவரரிய இயேசுவை தங்கள் வீட்டிலே ஏற்றுக் கொண்டார்கள். இயேசு மார்த்தாளிடத்திலும் அவளுடைய சகோதரியினிடத்திலும் லாசருவினிடத்திலும் அன்பாயிருந்தார். அவர் சிநேகித்து வந்த லாசரு வியாதியாய் இருக்கிறான் என்று பெத்தானியாவிற்கு திரும்பினார். இயேசு அவ்விடத்திற்கு வருவதற்கு முன்பதா கவே லாசரு மரித்துவிட்டான். இயேசு வருகிறார் என்று மார்த்தாள் கேள்விப்பட்டபோது, அவருக்கு எதிர்கொண்டுபோனாள்; மரியாளோ வீட்டிலே உட்கார்ந்திருந்தாள். மார்த்தாள் இயேசுவினிடத்தில் வந்து: ஆண்டவரே, நீர் இங்கேயிருந்தீரானால் என் சகோதரன் மரிக்கமாட்டான். இப்பொழுதும் நீர் தேவனிடத்தில் கேட்டுக்கொள்ளுவதெதுவோ அதை தேவன் உமக்குத் தந்தருளுவாரென்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: உன் சகோதரன் உயிர்த்தெழுந்திருப்பான் என்றார். அதற்கு மார்த்தாள்: உயிர்த்தெழுதல் நடக்கும் கடைசிநாளிலே அவனும் உயிர்த்தெழுந்திருப்பான் என்று அறிந்திருக்கிறேன் என்றாள். இயேசு அவளை நோக்கி: நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்;. உயிரோடிருந்து என்னை விசுவாசிக்கிறவனெவனும் என்றென்றைக்கும் மரியாமலும் இருப்பான்; இதை விசுவாசிக்கிறாயா என்றார். அதற்கு அவள்: ஆம், ஆண்டவரே, நீர் உலகத்தில் வருகிறவரான தேவகுமாரனாகிய கிறிஸ்து என்று நான் விசுவாசிக்கிறேன் என்றாள். பிரியமானவர்களே, இந்த உலகிலே நமக்கு உபத்திரவங்கள் ஏற்படலாம். சில வேளை களிலே, இயற்கை அனர்த்தங்கள், யுத்தங்கள், விபத்துக்கள் விசுவாசிகளையும் வாரிக் கொண்டு போகின்றதே என்று குழப்பமடையாதிருங்கள். துக்கம் மனதிலே இருக்கும் ஆனால் என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்; என்று ஆண்டவராகிய இயேசு கூறி யிருக்கின்றார். எவ்விதமான பெரு மழையோ, புயலோ மோதித்த தாக்கினாலும், விசுவாசத்திலே உறுதியாய் இருக்கின்றவன் அசைக்கப்படுவதில்லை. அவன் இந்த உலகிற்கு மறைந்து போனாலும், பரலோகிலே நித்திய வாழ்வை பெற்றுக் கொள்கின்றான். உங்கள் இருதயம் கலங்காதிருப்பதாக. தேவனிடத்தில் விசுவாசமாயிருங்கள், இயேசுவினிடத்தில் விசுவாசமாயிருங்கள். நித்திய வாழ்வை பெற்றுக் கொள்ளுங்கள்.
ஜெபம்:
என்னை வேறுபிரித்த தேவனாகிய கர்த்தாவே, நிலையற்ற உலகிலே வாழும் நான், நிலையான நகரமாகிய பரலோகத்தை நோக்கி செல்கின்றேன் என்ற உறுதியான விசுவாசத்தோடு வாழும்படிக்கு எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.
மாலைத் தியானம் - எபிரெயர் 13:14