புதிய நாளுக்குள்..

தியானம் (புரட்டாசி 14, 2026)

தேவனுக்குரிய வழி...

ஏசாயா 41:15

இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்;


ஈசாக்கு இரண்டு குமாரர்கள் இருந்தார்கள். மூத்தவன் ஏசா, இளையவன் யாக்கோபு. ஏசா அவன் சீரற்றவனும், தன்னுடைய மூத்தவனாக பிறந்ததின் மேன்மையும் குறித்து அசட்டையுள்ளவனுமாக இருந்தான். காலங்கள் கடந்த பின்பு, அவன் ஆசீர்வாதத்தை அடைய நாடியும், ஆகாதவன் என்று தள்ளப்பட்டு போனான். (எபிரெயர் 12:16-17). யாக்கோபு என்பவன், ஆசீர்வாதங்களின் மேன்மையை அறிந்தவனாகவும், அவற்றைக் குறித்து வாஞ்சையள்ளவனாகவும் இருந்தான். இந்நாட்களிலே, தந்திரமாக வியாபரங்களை செய்து, ஆதயத்தை உண்டுப ண்ணுகின்றவர்கள் ஒரு சிலரைப் போல, அவன் ஏமாற்றிப் பிழைக்கின்றவனாக காணப்பட்டான். யாக்கோபின் தகப்பனானவர், அவனைக் குறித்து கூறும் போது: உன் சகோதரன் தந்திரமாய் வந்து, உன்னுடைய ஆசீர்வாதத்தைப் பெற்றுக்கொண்டான் என்றான். அதற்கு ஏசா: அப் பொழுது அவன்: அவன் பெயர் யாக்கோபு என்னப்படுவது சரியல்லவா? இதோடே இரண்டுதரம் என்னை மோசம்போக்கினான்; என் சேஷ்ட புத்திரபாகத்தை எடுத்துக்கொண்டான். இதோ, இப்பொழுது என் ஆசீர்வாதத்தையும் வாங்கிக்கொண்டான் என்றான். நன்மையானவை களை வாஞ்சித்து, தன்சுயத்தினால் அவைகளை சம்பாதிக்க முயற்சி செய்தான். அது போலவே இன்று சில விசுவாசிகளும் தாங்கள் எதிலே சிறந்து விளங்குகின்றார்களோ, அந்த வழியிலே முன்னேறிச் செல்ல, தங்கள் சுயஅறிவினால் கிரியைகளை நடப்பிக்கின்றார்கள். குறித்த காலம் வந்தபோது, யாக்கோபு தன்னை ஆசீர்வதிக்கும்படி தேவனாகிய கர்த்தரிடம் கேட்டான். அவனை அவர் ஆசீர்வதித்தார். அவனுடைய பெயரை இஸ்ரவேல் என்று மாற்றினார். அவனுடைய சந்தததியை ஆசீர்வதித்தார். 'யாக்கோபு என்னும் பூச்சியே, இஸ்ரவேலின் சிறுகூட்டமே, பயப்படாதே; நான் உனக்குத் துணைநிற்கிறேன் என்று கர்த்தரும் இஸ்ரவேலின் பரிசுத்தருமாகிய உன் மீட்பர் உரைக்கிறார். இதோ, போரடிக்கிறதற்கு நான் உன்னைப் புதிதும் கூர்மையுமான பற்களுள்ள யந்தரமாக்குகிறேன்; நீ மலைகளை மிதித்து நொறுக்கி, குன்றுகளைப் பதருக்கு ஒப்பாக்கிவிடுவாய்.' பிரியமானவர்களே, நீங்கள் நான் இதிலே சிறந்தவன், நான் இப்படி பிழைத்துக் கொள்வேன். இதனாலே எனக்கு ஆதயம் உண்டு என்று மனித சுபாவத்திற்குரிய சுயவழிகளை தெரிந்து கொள்ளமல், தேவனாகிய கர்த்தரிடம் உங்கள் வழிகளை ஒப்புக் கொடுங்கள். அவன் காரியத்தை வாய்கப்பண்ணும் தேவனாயிருக்கின்றார்.

ஜெபம்:

ஆச்சரியமான வழியிலே என்னை நடத்திச் செல்லும் தேவனே, நான் என் சுய புத்தியின்மேல் சார்ந்து உலக ஆலோசனைகளுக்கு இடங் கொடாமல், உம்மை சார்ந்து வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - ஏசாயா 59:1