புதிய நாளுக்குள்..

தியானம் (மார்கழி 09, 2025)

என் இருதயம் எப்படிப்பட்டது?

மத்தேயு 13:23

நல்ல நிலத்தில் விதைக்கப்பட்டவனோ, வசனத்தைக் கேட்கிறவனும் உணருகிறவ னுமாயிருந்து, நூறாகவும், அறுபதா கவும், முப்பதாகவும் பலன் தருவான் என்றார்.


நித்திய ஜீவன் தரும் தேவனுடைய திருவார்த்தைகள் ஏன் சில விசுவாசிகளுடைய வாழ்விவே பலனற்றதாக போய்விடுகின்றது? தேவனுடைய வார்த்தை குறைவுள்ளதோ? இல்லை! கர்த்தருடைய மாறாத வார்த்தை சம்பூரணமானது. அந்த வார்த்தையானது, நற்பலன் தரும் நல்ல விதைக்கு ஒப்பிடப்படுகின்றது. நற்பலன் தரும் ஒரு மரத்தின் விதை யானது ஏதோ ஒரு நிலத்திலே விழுந்தால் அது நற்பலன் கொடுக்குமா? இந்த உலகத்திலே முள்ளும் குரு க்கும் களைகளை எந்த ஒரு நிலத் திலும் முளைத்து படர்ந்து, பரவி செல்கின்றது. ஆனால், நல்ல பலன் தரும் மரங்களின் விதைகள், விழு ந்து முளைப்பதற்கு, நிலமானது பண்படுத்தப்பட வேண்டும். பண் படுத்தப்பட்ட நிலம் பாதுகாக்கப் பட வேண்டும். பாதுகாக்கப்படும் அந்த பண்படுத்தப்பட்ட நிலம் பரா மரிக்கப்பட வேண்டும். அந்த நிலமானது விசுவாசிகளின் இருதயத்திற்கு ஒப்பிடப்படுகின்றது. தேவனுடைய வார்த்தையை கேட்கும் சிலர், தங் கள் இருதயத்தை வழியோரம் போல வைத்திருக்கின்றார்கள். போக்கும் வரத்துமான வழியோரத்திலே விதைகள் எப்படி விழுந்து எப்படி முளைக்கும்? 'ஒருவன், ராஜ்யத்தின் வசனத்தைக் கேட்டும் உணராதிரு க்கும்போது, பொல்லாங்கன் வந்து, அவன் இருதயத்தில் விதைக்கப்ப ட்டதைப் பறித்துக்கொள்ளுகிறான்; அவனே வழியருகே விதைக்கப்பட் டவன். கற்பாறை இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத்தைக் கேட்டு, உடனே அதைச் சந்தோஷத்தோடே ஏற்றுக்கொள்ளுகிறவன்; ஆகிலும் தனக்குள்ளே வேரில்லாதவனாய், கொஞ்சக்காலமாத்திரம் நிலைத்திரு ப்பான்; வசனத்தினிமித்தம் உபத்திரவமும் துன்பமும் உண்டானவுடனே இடறலடைவான். முள்ளுள்ள இடங்களில் விதைக்கப்பட்டவன், வசனத் தைக் கேட்கிறவனாயிருந்தும், உலகக்கவலையும் ஐசுவரியத்தின் மயக் கமும் வசனத்தை நெருக்கிப்போடுகிறதினால், அவனும் பலனற்றுப் போவான்.' அருமையான சகோதர சகோதரிகளே, உங்கள் இருதயம் இன்று எப்படி இருக்கின்றது? உணர்வற்ற வழியோரமா, கடினமான கற்பாறை நிலமா? உலக ஆசைகள் நிறைந்த முற்புதரா? அல்லது பண்படுத்தி, பாதுகாக்கப்பட்டு, பராமரிக்கப்படும் நல்ல நிலமா? தேவ வார்த்தையை கேட்டு, அதன்படி உங்கள் வாழ்வை அமைத்துக் கொள்ளுங்கள். எல்லாக் காவலோடும் உங்கள் இருதயத்தை காத்துக் கொள்ளுங்கள்.

ஜெபம்:

என்னை நித்திய ஜீவனுக்கென்று அழைத்த தேவனே, உம்முடைய வசனத்தின்படி என் இருதயத்தை நான் எல்லாக் காவ லோடும் காத்துக்கொள்ளும்படி என்னை உம்முடைய வழியிலே நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - நீதி 4:23