தியானம் (புரட்டாசி 13, 2026)
கர்த்தருக்கு காத்திருக்கின்றவர்கள்!
ஏசாயா 40:31
கர்த்தருக்குக் காத்திருக்கிறவர்களோ புதுப்பெலனடைந்து, கழுகுகளைப்போலச் செட்டைகளை அடித்து எழும்புவார்கள்; அவர்கள் ஓடினாலும் இளைப்படையார்கள், நடந்தாலும் சோர்ந்துபோகார்கள்.
இந்தப் பாடம் எனக்கு நன்றாக பிடிக்கும். இந்த வேலையைக் குறித்த காரியங்கள் எனக்கு இலகுவானது எனவே நான் இந்த வழியிலே செல்வேன் என்று இன்று மாணவர்கள் தீர்மானங்களை எடுத்தக் கொள்கின்றார்கள். அவர்கள் கூறிய தகவல்களிலே உண்மை உண்டு. அவ்வண்ணமாகவே, கல்வி நிலையங்களிலே அவர்களை வழிநடத்துகின்றவர்கள், தங்கள் வழிமுறைகளின்படி அவர்களுக்கு ஆலோசனை கூறி வழிநடத்துகின்றார்கள். தாங்கள் அறிந்தவைகளை சொல்லிக் கொடுகின்றார்கள். அவைகளின் முடிவுகளை நீங்கள் உங்கள் வாழ்க்கையின் அனுபதிலும், புள்ளிவிபரவியல் அடிப்படையிலும், இவ்வண்ணமாக தங்கள் வாழ்க்கையை அமைத்துக் கொண்டவர்களில் எத்தனை பேர் வெற்றி பெற்றிருக்கின்றார்கள்? எத்தனை பேர் தங்கள் தீர்மானங்களிலே கஷ்டப்படுகின்றார்கள்? எத்தனை பேர் தாங்கள் கற்ற வைகளுக்கு சம்பந்தம் இல்லாத வேலைகளை செய்கின்றார்கள்? சற்று சிந்தித்துப் பாருங்கள். உலகத்திலுள்ள மனிதர்கள், தங்கள் சுய பெலத்திலும், சுயஅறிவிலும், உலக ஆலோசனைகளின் வழியிலும் நடக்கின்றார்கள். அவர்கள் தேவ ஆலோசனைகளை அறியாதவர்கள். ஆனால், தேவனாகிய கர்த்தரை அறிந்து, வேதத்தை கற்றவர்கள் தங்கள் நினைவுகளை இந்த உலகத்தின் வழியிலே வைத்து, தங்கள் பிள்ளைகளுக்கும் அவைகளே கற்றுக் கொடுத்தால், தேவ ஆலோசனையில்லாத இடத்திலே அவர்களுக்கு பலன் என்ன? உலகத்திலுள்ளவைகளை அடையும்படி உலக ஆலோசனையின் வழியிலும், பரலோகத்திலுள்ளவைகளை கண்டடைய தேவனுடைய ஆலோசனையும் நாடுவேன் என்று ஒரு விசுவாசி கூற முடியுமா? சற்று சிந்தித்துப் பாருங்கள். பிரியமானவர்களே, முற்காலத்திலே தேவனை அறியாமல் வாழ்ந்த நாட்களிலே இந்த உலகத்தின் ஞானத்தைப் பின்பற்றி வந்தோம். ஆனாலே, தேவனை அறிந்த பின்பும், நாம் நிறைவை கண்டடையும்படி, குறைவானதை நம் இஷ்டப்படி தெரிந்து கொள்ளலாமா? மனிதனுக்கு நன்மையாக தோன் றும் வழிகள் அநேகம் உண்டு. அதன் முடிவு மரண வழிகள். எனவே, தேவனை அறிந்த நாம், நம்முடைய வாழ்வை தேவனிடம் முற்றிலும் ஒப்புக் கொடுத்து வாழ வேண்டும். அவர் நம்மை நிறைவான வழியிலே நடத்திச் செல்வார்.
ஜெபம்:
உமக்கு காத்திருக்கின்றவர்களுக்கு புது பெலன் தந்து வழிநடத்தும் தேவனாகிய கர்த்தாவே, எல்லா பருவங்களிலும் நான் தேவ ஞானத்தை நாடி, அதன் வழியிலே நடக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - ஏசாயா 58:11