கண்கள் இருந்தும் காதுகள் இருந்தும்

Posted on March 31, 2016 02:20:45

A SCARBOROUGH TAMIL CHRISTIAN CHURCH, TORONTO, ONTARIO - TAMIL CHIRSTIAN ARTICLE

ஒரு சிறு பையன் தனது வீட்டிலே விளையாடிக் கொண்டிருந்தான். அவனுடைய தாயார் அவனிடத்தில் அவனது அப்பா வந்திருப்பதாய் கூறினாள், ஆனால் அவனோ அப்பா வரவில்லை என்று மறுத்தான். அவன் தாயோ இங்கே வந்து பார், இதோ அப்பா வந்திருக்கிறார் என்றாள். அவனோ மீண்டும் மறுத்தான். அதைக் கேட்ட தகப்பனார் அவனைப் பெயர் சொல்லி அழைத்தார். அவனோ தான் மறுத்ததை சாதிக்க தன் காதுகளை தன் கையினால் அடைத்துக் கொண்டு தன் வாயினாலே தொடர்ச்சியாக சத்தம் போட்டான். தகப்பனோ தனது மகன் தன்னைக் காணத்தக்கதாய் அவன் முன்பாக வந்தார். அவனோ தன் கண்களையும் இறுக மூடிக்கொண்டான். இச்சிறுவனின் செயல் சிறுபிள்ளைத் தனமாய் இருக்கலாம் அல்லது பிடிவாதமாய் இருக்க லாம். அது எப்படியாய் இருந்தாலும் அவன் செயலானது அந்த நேரத்தில் அவனைத் தனது தகப்பனிடத்தில் சேராமல் தடுத்துவிட்டது.

இது அவன் கண்களின் குறைபாடா? அல்லது அவன் காதுகளின் குறைபாடா? இல்லை, இது அவனது தெரிந்து கொள்ளுதலாகும்.

ஒருவருடைய செயலை மனிதர்கள் பல்வேறு கோணங்களில் பார்க்கலாம். அச்செயலை பல்வேறு பெயர்களினால் அழைக்கலாம். ஆனால் அச்செயலின்; முடிவு என்ன என்பதே முக்கியமானது. 

பலர் தமது வாழ்வில் பணம், சிற்றின்பம், பகட்டு போன்று பல காரியங்களை முன் வைத்து அதையே நாடி, தேடி ஓடுகின்றார்கள். அதன் முடிவு பற்றி எண்ணமற்று வாழ்கின்றார்கள்.

தேவனுடைய வார்த்தையிலே “ஐசுவரியவான்களாக விரும்புகிறவர்கள் சோதனையிலும் கண்ணியிலும், மனுஷரைக் கேட்டிலும் அழிவிலும் அமிழ்த்துகிற மதிகேடும் சேதமுமான பலவித இச்சைகளிலும் விழுகி றார்கள். பண ஆசை எல்லாத் தீமைக்கும் வேராயிருக்கிறது. சிலர் அதை இச்சித்து, விசுவாசத்தைவிட்டு (தேவனுடைய வழியை விட்டு) வழுவி, அநேக வேதனைகளாலே தங்களை உருவக் குத்திக்கொண்டி ருக்கிறார்கள்.” என்று வேதாகமத்தில் வாசிக்கின்றோம்.

இவை உண்மையும், காலம் காலமாக மனிதர்களின் வாழ்வில் கண்ட உண்மையுமாகும். ஓருவனின் செயலுக்கு எவ்விதமான பெயர் இருந்தா லும் அது அவனது ஆத்துமாவைக் கெடுக்குமானால் அதனால் பிரயோசனம் என்ன? அவனது செயல் அவன் பிள்ளைகளின் ஆத்துமாவை அழித்துப்போடுமானால் அவனது பிரயாசம் எதற்கு?

தேவன் தமது தீர்க்கதரிசியினுடாக “காதாரக்கேட்டும் உணராதிருப்பீர்கள், கண்ணாரக்கண்டும் அறியாதிருப்பீர்கள். இந்த ஜனங்கள் கண்களினால் காணாமலும், காதுகளினால் கேளாமலும், இருதயத்தினால் உணர்ந்து மனந்திரும்பாமலும், நான் அவர்களை ஆரோக்கியமாக்காமலும் இருக்கும்படியாக, அவர்கள் இருதயம் கொழுத்திருக்கிறது, காதால் மந்தமாய்க் கேட்டு, தங்கள் கண்களை மூடிக்கொண்டார்கள்” என்று, மனிதர்களின் தெரிந்து கொள்ளுதலைக் குறித்துக் கூறியுள்ளார்.

ஓரு வாலிபன் தன் வீட்டைவிட்டு தூரதேசம் சென்றான். அவனிருந்த இடம் அவன் வீட்டாருக்கு தெரியாது. சில வருடங்களுக்கு பின்பு அவன் நோயுற்றான். வைத்திய செலவிற்கு அவனிடத்தில் பணமிருக்கவில்லை. அதனால் தன் தொழிலதிபரான தகப்பனாருக்கு தனது நிலையைக் கூறி தனக்கு பணம் வேண்டும் என்று கடிதம் எழுதினான். தனது தகப்பனின் பதிலை அவன் ஆவலுடன் பார்த்திருந்தான். ஓரு நாள் அவனது தகப்பனாரின் பதில் கடிதம் வந்தது. அதை அவசரமாய்த் திறந்தான். உள்ளே பணம் இருக்கவில்லை. அவன் கோபத்தோடு அக்கடிதத்தை குப்பையிலே எறிந்து விட்டான். இறுதியில் அவன் எவ்வித வைத்திய உதவியுமின்றி மரித்துப் போனான்.

அக்கடிதத்திலே அவனது தகப்பன் அவ்விடத்திலுள்ள தனது நண்பனை சந்திக்கும் படியும், அவனுக்கு வேண்டிய எல்லா வைத்திய உதவிகளையும் பண உதவிகளையும் செய்யும்படி தனது நண்பனுக்கு சொல்லியிருப்பதையும் எழுதியிருந்தார். ஆனால் அவனோ பணத்தையே எதிர்பார்த்துக் கொண்டிருந்ததனால், தகப்பன் அவனுக்கு ஆயத்தப் படுத்தியிருந்த மேலான நன்மைகளை இழந்து போனான்.

பிரியமான சகோதரனே, சகோதரியே!

ஓருவன் தேவனுடைய கிருபையையும் அவர் அவனுடைய வாழ்க்கையில் அவனுக்கென்று வைத்துள்ள நோக்கத்தையும் அவன் காணாமலும் கேளாமலும் இருப்பது ஏன் என்பது இதை வாசிக்கும் போது உனக்கு நிச்சயமாக புரிந்திருக்கும். அது உனது சொந்த தெரிந்து கொள்ளுதலாய் உள்ளது. ஆம், உன்னை சிருஷ்டித்த உன் தேவனை ஏற்றுக்கொண்டு வாழ்வது உனது தெரிந்து கொள்ளுதலாய் உள்ளது.  

இன்று உனது வாழ்க்கை மாறவேண்டும், வேண்டாத பாவ பழக்கங்களி லிருந்து விடுதலை வேண்டும், தேவனுடைய கிருபையை பெற வேண்டும் என்று விரும்பினால், பாவங்களை மன்னிக்கும் இயேசுவே என் வாழ்வில் வாரும். என் பாவங்களை மன்னித்து எனக்கு பாவ பழக்கங்களிலிருந்து விடுதலை தாரும் என்று கூறுவாயாக.

இயேசு சொன்னார்: என் ஆடுகள் என் சத்தத்திற்குச் செவிகொடுக்கிறது, நான் அவைகளை அறிந்திருக்கிறேன், அவைகள் எனக்குப் பின்செல்லுகிறது.”