புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 07, 2024)

நல்ல ஆதாரமாகிய பொக்கிஷம்

1 தீமோத்தேயு 6:19

நித்திய ஜீவனைப் பற்றிக் கொள்ளும்படி வருங்காலத்திற்காகத் தங்களுக்கு நல்ல ஆதாரத்தைப் பொக்கிஷமாக வைக்கவும் அவர்களுக்குக் கட்டளையிடு


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த மனிதனொருவனுக்கு நூற்றுக் கணக்கான ஆடுமாடுகளும், வளங்களும் இருந்தது. வருடாவருடம் அவை பெருகிக் கொண்டே போனது. அந்த ஊரிலே ஏழை எளிய வர்களுக்கு உதவி செய்ய வேண்டும் என்று ஒரு திட்டத்தை அவன் ஏற்படுத்தி அதை அமுல்படுத்தி வந்தான். தன்னிடம் இருக்கும் ஏராளமான ஆடுகளிலே ஒன்றை எடுத்து ஏழைகளுக்கு என்று கொடுத்துவிட்டு, ஊரிலே, ஒரு சில ஆடுகளோடு தங்கள் வாழ்க்கையை நட த்திவரும் பாமர குடிமக்களிடம், அதிகமாக கொடுக்கும்படிக்கும், கொடுத்தால், தன்னைப்போல அதிகமாக பெருகி வரும் என்றும் அவர்களுக்கு உபதேசித்து வந்தான். அப்படி செய்வதானால் ஊரிலும், பட்டணத்திலும், தன் பெயரையும் புகழையும் பெருகச் செய்தான். பரலோகத்தில் பொக்கிஷங்களை சேர்த்து வைக்கும்படி அழைக்கப்பட்ட அருமையான சகோதர சகோதரிகளே, கள்ளப் போதகர்களைக் குறித்து எச்சரிக்கையுள்ளவர்களாக இருங்கள் என்று வேதத்திலே நமக்கு எச்சரிக்கை கொடுக்கப்பட்டிருக்கின்றது. கள்ளப் போதகர்கள் மத்தியிலே பொதுவாக காணப்படும் ஒரு பொதுவான காரியம் என்னபதை நன்றாக அறிந்து கொள்ளுங்கள். பொருளாசையே அவர்களின் பொதுவான சின்னமாக இருக்கும். தேவன் தங்களை ஆசீர்வதித்து பெருகப் பண்ணுகின்றார் என்று தங்களை குறித்து பெருமிதமாக கூறி, தங்கள் வாழ்க்கைத் தரத்தை இந்தப் பூமியிலே உயர்த்திக் கொண்டே செல்கின்றார்கள். மேலே குறிப்பிட்ட சம்பவத்தைப் போல, கல்வி, ஆஸ்திகள், அந்தஸ்துக்கள் என்று அவர்கள் தங்கள் குடும்பங்களை இந்தப் பூமியிலே பெருகப் பண்ணிக் கொண்டு, தங்களிடம் மிகையாயிருப்பதில், மட்டாக ஏழைகளுக்கு கொடுத்து, எளிமையான வாழ்க்கை வாழும் விசுவாச குடும்பங்களை நோக்கி கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள், என்ற வசனத்தை ஊருக்கு உபதேசம் பண்ணுவார்கள். பிரியமான வர்களே, நம்முடைய குடியிருப்பு இந்தப் பூமிக்குரியதல்ல. நித்திய ஜீவனை பற்றி பிரசங்கித்து, அதை தங்கள் சொந்த வாழ்க்கையில் கைக்கொண்டு, கனிகொடுத்து வாழ்பவர்களை நீங்கள் பின்பற்றுங்கள்.

ஜெபம்:

ஜீவனுள்ள தேவனே, நாம் அனுபவிக்கிறதற்குச் சகலவித நன்மைகளையும் நமக்குச் சம்பூரணமாய்க் கொடுக்கிற உம்மேல் நம்பிக்கை வைத்து வாழும்படிக்கு எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து வழிநடத்துவீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 யோவான் 2:17