புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 03, 2024)

மனதின் வாஞ்சைகள்

யோவான் 4:34

இயேசு அவர்களை நோக்கி: நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடி ப்பதே என்னுடைய போஜனமாயிருக்கிறது


ஒரு ஊரிலே வாழ்ந்து வந்த விதவையான தாயானவள், தன் பிள்ளைகளின் எதிர்கால வாழ்க்கை செழிப்பாக இருக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், தனக்குண்டான கஷ்டங்களை பொருட்படுத்தாமல், கடுமையாக உழைத்து வந்தாள். அவள் வசித்த வந்த ஊரில் வாழ்ந்த மக்களில் சிலர், அவளை பரியாசம் பண்ணினார்கள். வேலை செய்யும் இடங்களிலே பல நிந்தைகள் உண்டாயிற்று. அந்த வேளைகளிலே, தன் பிள்ளைகளை குறித்த சிந்தையும், வாஞ்சையும் அவள் இருதயத்தில் நிறைந்திருந்ததினால், எந்த ஏளனங்களும், பரியாசங்களும், நிந்தைகளும், கஷ;டங்களும், அவள் இருதயத்தில் குடிகொள்ள இடம் இல்லாதிருந்தது. தன் பிள்ளைகள் பாதுகாப்பான கூரையின் கீழ் வாழ்ந்து, பட்டினியிருக்காமல் வேளைக்கு உணவு உண்டு, உடுத்துவதற்கு தகுந்த உடைகளை உடுத்தி, பாடசாலைக்கு சென்று படித்து வருவதை கண்டு அவள் மிகவும் திருப்தியடைந்தாள். அவளுடைய பாடுகள் மத்தியிலும், மனதிலே பெரிதான சந்தோஷம் நிலை கொண்டிருந்தது. ஆம் பரிசுத்த வாழ்வு வாழும்படிக்கும், நித்திய ஜீவனை சுதந்தரித்து, பரமனோடு நீடூழி வாழும்படிக்கும் மகத்துவமுள்ள அழைப்பை பெற்ற பிரியமான சகோதர சகோதரிகளே, அந்த விதவையான தாயானவள் சந்தித்தது போல, நமக்கும் இந்த உலகத்திலே பாடுகள் உண்டு. பாடுகள் மத்தியிலே நம்முடைய இருதயத்தில் இருக்கும் வாஞ்சையும் விருப்பமும் என்ன என்பதை ஆராய்ந்து அறிந்து கொள்ள வேண்டும். பிதாவாகிய தேவனுடைய சித்தத்தை நிறைவேற்றவதே நம்முடைய இருதயத்தின் வாஞ்சையும் மகிழ்ச்சியுமாக இருந்தால், அவருடைய சித்தத்தை நிறை வேற்றும் வழியிலே உண்டாகும் பாடுகளும், துன்பங்களும், நமக்குள் இருக்கும் திவ்விய சமாதானத்தை கலைத்துப் போட முடியாது. நாம் நமக்கு பிடித்த சுவையான உணவை உண்ணும் போது, பசியை ஆற்றுவது மட்டுமல்லாமல், அந்த உணவினாலே திருப்தியடைகி ன்றோம். நான் என்னை அனுப்பினவருடைய சித்தத்தின்படி செய்து அவருடைய கிரியையை முடிப்பதே என்னுடைய போஜனமாயிரு க்கிறது என்று ஆண்டவராகிய இயேசு கூறினார். அதனால் பிதாவின் சித்தம் செய்வது அவருக்கு சந்தோஷமாக இருந்தது. உங்களுடைய மன வாஞ்சை என்ன? உங்களை திருப்திபடுத்தும் போஜனம் என்ன?

ஜெபம்:

மனக்க கண்களை தெளிவு படுத்தும் தேவனே, நான் எப்போதும் உம்முடைய திருச்சித்தத்தை செய்வதிலே திருப்தியடைகின்றவனாக வாழ எனக்கு உணர்வுள்ள இருதயத்தை தந்து நடத்திச் செல்வீராக. இரட் சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - அப் 5:40-42

Category Tags: