புதிய நாளுக்குள்..

தியானம் (பங்குனி 22, 2024)

புதிய மனுஷனுக்குரிய சுபாவம்

கொலோசெயர் 3:10

புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கிறீர்களே.


ஒரு மனிதனானவன், எப்படிப்பட்ட சூழ்நிலைகளிலும், தவறாமல் பண்டிகை நாட்களிலே விரதங்களை கடைப்பிடிப்பதிலே வைராக்கியமுள்ளவனாக இருந்தான். விரதம் பிடித்தால், அந்த மனிதனைப் போல பிடிக்க வேண்டும் என்று ஊராரில் அநேகர் கூறுமளவறிற்கு அவன் நேர்த்தியாக விரதங்களை கடைப்பிடித்து வந்தான். அவன் வாழ்விலே தேவ கிருபையானது வெளிப்பட்ட போது, ஆண்டவராகிய இயேசு வழியாக உண்டாகிய இரட்சிப்பை ஈவாக பெற்றுக் கொண்டான். இரட்சிப்பை பெற்றுக் கொண்ட நாளிலே மனதிலே சொல்ல முடியாத மகிழ்ச்சி. பாவ சாப கட்டுகளிலிருந்து விடுதலையை எந்தக் கிரியைகளோ கிரித்தியங்களோ, பணமோ, விலையொ இன்றி இலவசமாக பெற்றுக் கொண்டான். இப்பொழுது அவன் 'தன்னைச் சிருஷ்டித்தவருடைய சாயலுக்கொப்பாய்ப் பூரண அறிவடையும்படி புதிதாக்கப்பட்ட புதிய மனுஷனைத் தரித்துக்கொண்டிருக்கின்றான்' ஆதலால் அவன் வேத வார்த்தைகளின் வழிநடத்துதலின்படி அவன் இனி பூமிக்குரிய வைகளையல்ல, பரலோகத்திற்குரிய மேலானவைகளை நாடித் தேடுவதற்குரிய வழிகள் யாவையும் அவனுக்கு அமைத்துக் கொடுக்கப்பட்டிருக்கின்றது. அவன் சத்திய வழியிலே நடத்துவதற்கு சத்திய ஆவியானவர் அவனோடிருக்கின்றார். அவனுடைய சகவிசுவாசியொருவன் அவனுக்கெதிராக குற்றம் செய்த போது, கிறிஸ்து உங்களுக்கு மன்னித்ததுபோல, ஒருவருக்கொருவர் மன்னியுங்கள் என்ற உணர்வும் உந்துலும் அவனுடைய சுத்த மனசாட்சியிலே ஏற்பட்டது. அதற்கு எதிராக அவன் மாம்ச சிந்தையானது, நீ மன்னித்தால் உன் குடும்ப கௌரவம் என்னாவது' என்று கூறியது. அவன் ஆவியின் சிந்தைக்கு இடம் கொடாமல், மன்னிப்பதை பின்பு பார்த்துக் கொள்வோம் என்று விட்டு விட்டான். நாட்கள் கடந்து சென்றதும், அநேக நாட்கள் உபவாசிப்பதற்கு தீர்மானம் செய்து, அந்த நாட்களை வைராக்கியத்தோடு நிறைவேற்றி முடித்தான். ஆனால், அந்நாட்களுக்கு பின்பும் அவன் தனக்கெதிராக குற்றம் செய்த சகவிசுவாசியானவனை மன்னித்துவிட மனதில்லாதவனாகவே இருந்தான். பிரியமானவர்களே, கிறிஸ் துவை அறிய முன்பதாகவும் இத்தகைய விரதங்களை அவன் வைராக்கியத்தோடு ஒழுங்காக நடப்பித்து முடித்தான் அல்லவோ? அப்படி யானால் அவன் இப்போது செய்த உபவாசத்தினாலே அவனுக்கு உண்டான பலன் என்ன? தேவவார்த்தைக்கு கீழ்படிவில்லாத உபவாசம் தேவனுடைய பார்வையிலே ஏற்புடையதாக இருக்குமோ?

ஜெபம்:

கிருபையினாலே என்னை இரட்சித்த தேவனே, என் மாம்சத்திலே உண்டாகும் வைக்கிராக்கியங்களைக் குறித்து மேன்மை பாராட்டாமல் உம் வார்த்தைக்கு கீழ்படிந்திருக்க கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - எபே 2:8-9