புதிய நாளுக்குள்..

தியானம் (தை 20, 2024)

மெய்யான ஒளி பிரகாசிக்கட்டும்

யோவான் 1:5

அந்த ஒளி இருளிலே பிரகாசிக்கிறது; இருளானது அதைப் பற்றிக்கொள்ளவில்லை.


ஒரு விசுவாசியானவனின் குடும்பத்திலே ஜெபமும் வேதவாசிப்பும், தியானம் ஒழுங்காக நடைபெற்றுக் கொண்டிருந்தது. விசேஷ தினங்களிலே அவர்கள் கூடிவரும் போது, அவர்கள் ஆர்வத்தோடு, முதலாவதாக, ஆண்டவராகிய இயேசுவுக்கு நன்றி செலுத்துவது வழக்கமாக இருந்தது. இதனால், அவர்களின் சில உறவினர்கள், அவர்களுடைய விசேஷித்த நாட்களிலும், கொண்டாட்டங்களிலும் கலந்து கொள்ளாமல் இருந்து வந்தார்கள். ஆண்டுகள் கடந்து சென்றபின், கர்த்தரை அறியாத உறவினர்கள், அந்த விசுவாச குடும்பத்தோடு, ஒரு ஒப்பந்தத்தை ஏற்படுத்திக் கொண்டார்கள். உங்கள் சபையோர் ஒன்றுகூடி வரும்போது நீங்கள் ஜெபித்துக் கொள்ளுங்கள், ஆனால் நாங்கள் உறவினராக கூடும் போது, ஜெபத்தை செய்யாதிருங்கள். அப்படியானால், நாங்கள் யாவரும் ஒன்றாக சந்தோஷமாக நேரத்தை கழிக்கலாம் என்று கூறினார்கள். உறவுகளை ஆதா யப் படுத்த வேண்டும் என்று அந்த விசுவாசக் குடும்பத்தினரும், விசேஷித்த நாட்களிலே, உறவுகள் முன்னிலையில் ஜெபம் செய்வதை விட்டுவிட்டார்கள். இது தங்கள் பரந்த தாராளமான மனம் என்று நினைத்துக் கொண்டார்கள். எல்லோரையும் ஏற்றுக் கொள்ள வேண்டும். மற்ற வர்களின் மனங்களை நாங்கள் துன்பப்படுத்துவது நல்லதல்ல, எனவே கொஞ்சம் அவர்களுக்காக எங்கள் வாழ்க்கையை மாற்றிக் கொள்வோம் என்று சமரசம் செய்து கொண்டார்கள். இது அவர்களுடைய பின்மாற்றமான வாழ்வு என்று உணராதபடிக்கு, அவர்கள் இருதயத்திலே இருள் ஆட்கொள்ள ஆரம்பித்தது. ஆனால், அவர்களோ, நாங்கள் ஆலயத்திற்கு செல்கின்றோம் அதனால் நாங்கள் ஒளியிலே நடக்கின்றோம் என்று எண்ணிக் கொண்டார்கள். ஆனால், அவர்கள் தங்கள் இருதயத் திலே, மெய்யான ஒளியானது பிரகாசிக்காதபடிக்கு, திரையை போட்டுக் கொண்டதை உணராமல் வாழ்ந்து வந்தார்கள். தேவன் ஒளியாயிருக்கிறார், அவரில் எவ்வளவேனும் இருளில்லை. இது நாங்கள் அவரிடத்தில் கேட்டு, உங்களுக்கு அறிவிக்கிற விசேஷமாயிருக்கிறது. நாம் அவ ரோடே ஐக்கியப்பட்டவர்களென்று சொல்லியும், இருளிலே நடக்கிறவர்களாயிருந்ததால், சத்தியத்தின்படி நடவாமல் பொய்சொல்லுகிறவர்களாயிருப்போம். மெய்யான ஒளியாகிய இயேசு நம்மோடு இருந்தால், அங்கே இருளுக்கு இடமேயில்லை. அந்த மெய்யான ஒளியானது, நம் மில் எப்போதும் பிரகாசிக்கும்படி உணர்வுள்ள வாழ்க்கையை வாழ்வோமாக.

ஜெபம்:

அந்தகார இருளிலிருந்து ஆச்சரியமான ஒளிக்கு என்னை அழை த்த தேவனே, நான் பெற்றுக் கொண்ட மெய்யான ஒளியானது எப்போதும் சுடர்விடும்படி உணர்வுள்ள ஜீவியத்தை ஜீவிக்க எனக்கு கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - மத்தேயு 5:16