புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 24, 2023)

தவறிலிருந்து தப்பித்துக் கொள்ள வழி

அப்போஸ்தலர் 3:20

உங்கள் பாவங்கள் நிவிர்த்தி செய்யப்படும்பொருட்டு நீங்கள் மனந்திரும்பிக் குணப்படுங்கள்


ஒரு வாலிபனானவன் தன் பட்டபடிப்பை முடித்தபின்பு, தன் நண்பர்கள் ஒருசிலரோடு சேர்ந்து வியாபார ஸ்தாபனமொன்றை சட்டப்படி நிறுவினான். அவனுடைய தகப்பனானவர், நீ யாரை நண்பர்கள் என்று அழைக்கின்றாய் என்பதைக் குறித்து விழிப்புள்ளவனாக இரு என்று அநேக தடவைகள் அவனுக்கு அறிவுரைகளை கூறியிருந்தார். ஆரம்பத்திலே நன்றாக ஓடிக்கொண்டிருந்த வியா பாரமானது, தீடிரென்று ஸ்தம்பிதமாகிவிட்டது. அவனோடுகூட பங்குதாரராக இருந்த சில நண்பர்கள், அவர்களுடைய ஸ்தாபனத்தின் சொத்துக்களை துஷ்பிரயோகம் செய்தார்கள். அதனால், நண்பர்களிடையே கருத்து முரண்பாடுகள் ஏற்பட்டுவிட்டது. தற்போது வியாபாரம் நட்டத்தில் ஒட ஆரம்பித்த போது, இந்த வாலிபனான், தன் நண்பர்களோடு உறவைத் துண்டித்துவிட்டு, தன் தொலை பேசி இலகத்தை மாற்றிவிட்டு, தொலைந்தது தொல்லை என்று கூறி, தன் வீட்டிலே இருந்துவிட்டான். ஆனால் சில கிழமைகளுக்கு பின்னர், முன்குறித்த ஒருநாளிலே நீதிமன்றத்திற்கு வரும்படியாக, சட்டபூர்வமான அறிவிப்பை கடிதம் வாயிலாக பெற்றிருந்தான். அவனுடைய தகப்பனானவர், அவனை நோக்கி: மகனே, வியாபாரத்தை ஆரம்பிக்க முன்னர் நீ என் ஆலோசனையை தட்டிக் கழித்துவிட்டாய். அதுபோல இக்கட்டிலி ருக்கும் நீ இப்பொழுதும் என் ஆலோசனையை தட்டிக் கழிக்காமல், அதற்கு செவிகொடு. இப்போதாவது உன் நண்பர், உண்மையான நண் பர்கள் இல்லை என்பதை நீ அறிந்து கொண்டது நல்லது. ஆனால், நீ சட்டபூர்வமான வியாபார ஒப்பந்தத்தில் உன்னை பிணைத்துவிட்டாய். நீ சட்டப்படி உன் கடமைகளை நிறைவேற்ற வேண்டும். நஷ்டம் உண்டு, ஆனால் உன் ஆணையை நீ இப்போது மாற்ற முடியாது. மேலும் உன் வாழ்க்கையை நீ குழப்பிக் கொள்ளாமல், பொறுமையோடு, நீ செய்ய வேண்டியவைகளை நீதியான வழியிலே செய்து முடி. உன் கடந்த கால பின்னடைவுகளானது உன் எதிர்காலத்திற்கு ஒரு நல்ல படிப்பினையாக இருக்கும் என்று அறிவுரை கூறினார். ஆம் பிரியமானவர்களே, தேவனுடைய வார்த்தையை அசட்டை பண்ணி, சுய இஷ்;டப்படி ஒரு தவறை செய்த பின்பு, அதை உணர்ந்து கொள்ளும் போது, அதிலிருந்து தப்பித்துக் கொள்ள மறுபடியும் சுய இஷ்டப்படி பாவத்தை மறைக்க இன்னுமொரு பாவத்தை செய்து கொள்ளாமல், தேவனுடைய வார்த்தையின் வழியிலே வாழும்படி முற்றாக உங்களை தேவனுடைய பாதத்திலே ஒப்புக் கொடுங்கள்.

ஜெபம்:

சகலமும் அறிந்த தேவனே, என் தவறான வழிகளிலிருந்து நான் தப்பித்துக் கொள்ள மேலும் தவறான வழியை தெரிந்து கொள்ளாமல், உம்முடைய சத்திய வழியில் என்னை நடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 34:5