புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 09, 2023)

என்னுடைய அழைப்பு

1 யோவான் 2:17

தேவனுடைய சித்தத்தின்படி செய்கிறவனோ என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.


ஒரு தகப்பனானவர் பாடசாலைக்கு செல்லும் தன் மகனானவனுக்கு பல கலைகளை கற்றுக் கொள்ளும்படிக்கு வசதிகளை ஏற்படுத்திக் கொடு த்தார். அவன் கல்வியிலும், விளையாட்டு துறையிலும் சிறந்து விளங்கினான். அவன் வாலிப பருவத்தை அடைந்து, பட்டப்படிக்கு செல்ல வேண்டிய நாட்கள் அண்மித்த போது, பிரபல்யமான விளையாட்டுக் கழகமொன்றிலிருந்து அவனுக்கு அழைப்பு வந்தது. அநேக வருடங்கள் படித்து, இன்னும் பல வருடங்கள் கடுமையாக உழைத்து சேர்ப்பதைப் பார்க்கிலும், அந்த விளையாட்டு கழகத்தில் சேர்ந்து கொண்டால், நூறு மடங்கு அதிகமாக ஒரே வருடத்தில் உழைத்துவிடலாம் என்று அந்த அழைப்பை ஏற்கும்படி தகப்பனானவர் அறிவுரை கூறினார். அதனால் அவன் தன் மேற்படிப்பை விட்டுவிட்டான். விளையாட்டுத் துறையில் பயிற்சிகளும், முக்கிய போட்களும் வார இறுதியில் நடை பெறுவதால், ஆலயத்திற்கு செல்வதை அவன் விட்டுவிட்டான். எப்போதவது நேரம் கிடைக்கும்போது, கிழமை நாட்களிலே ஆலயத்திற்கு செல்லலாம் என்று பெற்றோரும் அறிவுரை கூறினார்கள். இப்படியாக, அந்த விளையாட்டு கழகத்திலே இணைந்து கொள்வதற்காக தன் வாழ்க்கையிலே எதையும் இழந்துவிட அவனும் அவனுடைய குடும்பத்தாரும் தயாராக இருந்தார்கள். தங்கள் மனதில் தோன்றும் இச்சைகளை அவர்கள் அழைப்பு என்று கூறிக்கொண்டார்கள். இவ்வண்ணமாகவே, இன்று பல தேவ பிள்ளைகளும், தங்கள் அழைப்பின் மையப்பொருளாக பணத்தை வைத்திருக்கின்றார்கள். அதவாது, நான் இன்ன இடத்திலே இப்படியாக கல்வி கற்பதையே விரும்புகின்றேன். அந்த விருப்பத்தின் முக்கிய காரணியாக நல்ல உத்தியோகத்தை எடுப்பதும், கைநிறைய உழைப்பதுமாக இருக்கின்றது. அது தங்களுடைய அழைப்பு என்று கூறிக்கொண்டு, தேவன் விட்டுவிடாதே என்று சொல்லும் காரியங்களைவிட்டுவிட்டு, தேவன் விட்டுவிடு என்று கூறும் காரியங்களை பற்றிக் கொள்கின்றார்கள். தாங்கள் விரும்பும் கல்விக்காக, வேலை க்காக, திருமணத்திற்காக, தங்கள் உல்லாச பயணங்களுக்காக தேவன் நியமித்த ஒழுங்குகளை விட்டுவிட அவர்கள் ஆயத்தமுள்ளவர்ளாக மாறி விடுகின்றார்கள். நீங்களோ இவ்வண்ணமாக கர்த்தரை அறிந்து கொள்ளவில்லை. எனவே, முதலாவதாக தேவனுடைய சித்தம் உங்கள் வாழ்வில் நிறைவேற இடங்கொடுங்கள். தேவசித்தத்தின் மையப்பொருள் நித்திய ஜீவனாக இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளுகள்.

ஜெபம்:

நித்திய ஜீவனுக்கென்று என்னை அழைத்த தேவனே, இவ்வுலகிலே வரும் அழைப்புக்கள் என் வழியே வரும் அழைப்புக்கள் யாவற்றையும் உம் முடைய அழைப்பு என்று எண்ணாமல், நீர் காட்டிய வழியிலே செல்ல கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - சங்கீதம் 37:5