புதிய நாளுக்குள்..

தியானம் (ஆனி 04, 2023)

ஞானவான்கள் யார்?

சங்கீதம் 19:7

கர்த்தருடைய சாட்சி சத்தியமும், பேதையை ஞானியாக்குகிறதுமாயிருக்கிறது.


நாங்கள் தீர்க்கதரிசனங்களை அறிந்திருக்கின்றோம். நாங்கள் தேவன் கொடுத்த வேத பிரமாணங்களை நன்றாக ஒழுங்கு முறைப்படி கற்றிருக்கின்றோம் என்று சிறப்புக் குழுக்களை சேர்ந்த சதுசேயர், பரிசேயர், வேதபாரகர்கள் தங்களைக் குறித்து மேன்மைபாராட்டினார்கள். ஆனால் அவர்கள் வேத பிரமாணம் எடுத்து கூறும் மீட்பராகிய இயேசுவை அறியாது போனார்கள். இவர்கள் தங்களை ஞானிகள் என்று கூறிக்கொண்ட போதிலும், ஆண்டவர் இயேசுவை அறியாது போனதினால், அவர்கள் தேவனுடைய பார்வையிலே பேதமையுள்ளவர்களாகவே காணப்பட்டார்கள். ஆனால், இந்த உலகத்தின் அளவுகோலின்படி வேத பிரமாணங்களை கற்றுத் தேறாதவர்களாகிய ஆண்டவர் இயேசுவின் சீஷர்கள், இந்த உலகத்தின் ஞானிகளால், பேதமையுள்ளவர்கள் என்று கருதப்பட்ட போதும், அவர்கள் ஆண்டவர் இயேசு யார் என்பதையும், அவர் எங்கிருந்து வந்தார் என்பதையும் குறித்து நிறைவான அறிவுள்ளவர்களாக இருந்தார்கள். இந்த அறிவு யாரால் உண்டானது? ஒரு சமயம் ஆண்டவராகிய இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: நீங்கள் என்னை யார் என்று சொல்லுகிறீர்கள் என்று கேட்டார். சீமோன் பேதுரு பிரதியுத்தரமாக: நீர் ஜீவனுள்ள தேவனுடைய குமாரனாகிய கிறிஸ்து என்றான். இயேசு அவனை நோக்கி: யோனாவின் குமாரனாகிய சீமோனே, நீ பாக்கியவான்; மாம்சமும் இரத்தமும் இதை உனக்கு வெளிப்படுத்தவில்லை, பரலோகத்திலிருக்கிற என் பிதா இதை உனக்கு வெளிப்படுத்தினார். ஆம், தங்களை தேவனுடைய சத்திய வார்த்தைக்கு ஒப்புக்கொடுத்து, மனத்தாழ்மை யோடு வேத வார்த்தைகளை ஏற்றுக் கொள்கின்ற யாவரும், ஆண்டவர் இயேசு யார் என்பதை அறிந்து கொள்கின்றார்கள். ஞானி எங்கே? வேதபாரகன் எங்கே? இப்பிரபஞ்சத் தர்க்கசாஸ்திரி எங்கே? இவ்வுலகத்தின் ஞானத்தை தேவன் பைத்தியமாக்கவில்லையா? ஒருவனும் சுய ஞானத்தினால் ஆண்டவர் இயேசுவை அறிய முடியாது. ஆனால்; வேத வார்த்தைகளோ, பேதைகளையும் மெய்ஞானமுள்ளவர்களாக மாற்றுகின்றது. இந்த உலகஞானம் அழிந்து போகும். ஆனால் தேவஞானமே மெய்யான ஞானம். எவர்கள் அழைக்கப்பட்டிருக்கிறார்களோ அவர் களுக்குக் கிறிஸ்து தேவபெலனும் தேவஞானமுமாயிருக்கிறார். எனவே தேவனுடைய சமுகத்திலே உங்களை தாழ்த்தி வேத வார்த்தைகளை தியானியுங்கள். அவரை அறிகின்ற அறிவிலே வளருங்கள்.

ஜெபம்:

ஞானத்தின் ஆவியை அருளும் தேவனே, நான் இந்த உலகத்தினால் உண்டாகும் ஞானத்தை நாடாமல், மெய்யான தேவ ஞானத்தை நாடித்தேடும்படி பிரகாசமுள்ள மனக்கண்களை தந்து வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 11:25