புதிய நாளுக்குள்..

தியானம் (வைகாசி 01, 2023)

அன்பிலே வளர்ந்து பெருகுங்கள்

1 தெச 4:10

சகோதரரே, அன்பிலே நீங்கள் இன்னும் அதிகமாய்ப் பெருகவும்;


குடும்பத்தாரையும், சொந்த பந்தங்களையும் அன்பு செய்வதே மிகவும் அரிதாக இருக்கும் இந்தக் காலத்திலே, எம் உடன் சகோதரரரையும், ஏனையோரையம் அன்பு செய்வது எப்படி சாத்தியமாகும்; என்று ஒரு விசுவாசியானவன் தன் மேய்ப்பரோடு, தேவ அன்பைக் குறித்து பேசிக் கொண்டிருந்தான். இந்த உலகிலே, பொதுவாக மனிதர்களுக்கிடையே நட்பு எப்படி உருவாகின்றது? எனக்கு பிடித்த வாழ்க்கைமுறை, பொழுதுபோக்குகள் அவருக்கும் பிடித்திருக்கின்றது எனவே நாம் நண்பர்களாக இருக்கின்றோம் என்றும், என்னுடைய பிள்ளை படிக்கின்ற பள்ளி க்கூடத்திலே, இன்னாருடைய பிள்ளைகளும் படிப்பதால், நாம் ஒருவருக்கொருவர் உதவிசெய்து இரு குடும்பங்களும் நட்பாக இருக்கின்றோம் என்றும் தங்கள் நட்பின் ஆரம்பத்திற்கான காரணங்களை கூறிக் கொள்ளுகின்றார்கள். ஆனால், மனிதர்களுக்கிடையிலான உறவு, சோதனைக்குட்படுத்தப்படும் போது, அந்த உறவின் உறுதியும், மனிதர்களின் உண்மையான சுபாவங்களும் வெளிக்காட்டப்படுகின்றதையும் நாம் காணலாம். பொதுவாக விருப்பு வெறுப்புக்களை மையமாக வைத்து உண்டாகும் நட்பும் உறவும் விசுவாசிகளுக்கிடையிலே இருப்பதையும் நாம் காண்கின்றோம். ஆனால், தேவனானவர் கூறும் அனபானது நம்முடைய விரும்பங்களை மையமாக கொண் டிருக்கும் அன்பல்ல. இந்த உலகத்திலே, தாயின் அன்பே மனிதர்களால் மிகவும் உயர்ந்ததாக மேன்மைபாராட்டப்படுகின்றது. ஆனால், சில வேளைகளிலே தாயின் அன்பானது தணிந்து போய்விடலாம். ஆனால், கிறிஸ்துவின் அன்போ என்றும் மாறாததாக இருக்கின்றது. அத்தகைய அன்பிலே நாம் வளர்ந்து பெருக வேண்டும் என்பதே தேவனுடைய சித்த மாக இருக்கின்றது. மனித பெலத்தால் நாம் அத்தகைய அன்பை வளர்க்க முடியாது என்பதை தேவனானவர் அறிந்தபடியால், இயேசு கிறிஸ்துவிலிருந்த பரிசுத்த ஆவியை நமக்கு கொடுத்திருக்கின்றார். மெய்யாகவே மெய்யாகவே நான் உங்களுக்குச் சொல்லுகிறேன்; நான் என் பிதாவினிடத்திற்குப் போகிறபடியினால், என்னை விசுவாசிக்கிறவன் நான் செய்கிற கிரியைகளைத் தானும் செய்வான், இவைகளைப்பார்க்கிலும் பெரிய கிரியைகளையும் செய்வான் என்று ஆண்டவராகிய இயேசு கூறியிருக்கின்றார். மேலும் நாம் ஒருவரிலொருவர் அன்பாயிருக்கும்படிக்கு தேவனால் போதிக்கப்பட்டவர்களாயிருக்கின்றோம். அந்தப் போதனைகளுக்கு இடங் கொடுப்போம். தேவ அன்பிலே தினமும் வளருவோமாக.

ஜெபம்:

அன்பின் தேவனே, உம்மால் ஆகாதது ஒன்றுமில்லை என்பதை நான் உண்மையாக விசுவாசித்து, அறிக்கையிட்டு, கிறிஸ்துவின் அன்பிலே வளர்ந்து பெருகும்படி என்னை வழிநடத்திச் செல்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - யோவான் 14:12-16