புதிய நாளுக்குள்..

தியானம் (தை 20, 2023)

வேண்டுதலின் பட்டியல்

சங்கீதம் 103:2

அவர் செய்த சகல உபகாரங்களையும் மறவாதே.


ஒரு தகப்பனானவர், தன் பிள்ளைகளின் தேவைகளையறிந்த அவைகளை குறித்த தான் நேரத்திலே சந்திக்க வேண்டுமெனவும், மற்றய பிள்ளைகள் மத்தியிலே இவர்கள் வெட்கமமையாததிருக்க வேண்டும் என் றும் அவர்களின் மனதின் விருப்பங்களை நிறைவேற்ற வேண்டுமென்ப தற்காக தன்னால் இயன்றவரை பல பிரயாசங்களை பட்டுவந்தார். தான் வேலை செய்யும் இடங்களிலே, அவமானத்தை சகித்தாலும், தன் பிள்ளைகள் தலை தூக்கி நிற்க வேண்டும் என்ற மனநிலையுடன் அவர் அயராது உழைத்து வந்தார். நாளுக்கு நாள் தேவைகளின் பட்டியல் பெரிதாகிக் கொண்டே சென்றது. இப்படியாக ஆண்டுகள் ஓடிக் கொண்டிருக்கும் வேளையிலே, ஒரு நாள், அந்த தகப்பனானவருடைய பிறந்ததினமன்று, அவருடைய சின்ன மகளானவள், அவருக்கு எழுதிக் கொடுத்த பிறந்த நாள் வாழ்த்துக்கள் அவரின் மனதை மிகவும் தொட்டது. 'அப்பா, நீங்கள் எங்களுக்காக செய்து வரும் காரியங்கள் எத்தனை எத்தனை அதிகமாயிருக்கின்றது. நீங்கள் இவ்வளவாய் எங்களை அன்பு செய்கின்றீர்களே, எல்லாவற்றிற்காவும் உங்களுக்கு நன்றி' என்று அந்த வாழ்த்திழில் தன் கையெழுத்தால் எழுதியிருந்தாள். 'பிள்ளைகளை பார்ப்பது பெற்றோரின் கடமை, அவர்கள் தானே எங்களை பெற்றார்கள்' இப்படியாக இன்றைய நாட்களிலே, சில பிள்ளைகள் நன்றியறியாதவர்களாயும், சுபாவ அன்பில்லாதவர்களாயும், அகந்தையோடு பேசுவதை நாம் காணாலாம். நம்முடைய வாழ்க்கையிலும், நம் பரம தந்தையாகிய, நமது தேவனாகிய கர்த்தரை நோக்கி, நாம் அனுதினமும் பல வேண்டுதல்களை ஏறெடுக்கின்றோம். அந்தப் பட்டி யலானது குறைந்து போவதில்லை. சில வேளைகளிலே வேண்டுதலின் ஜெபம் என்று தேவ பிள்ளைகள் நாட்களை முன்குறித்து, உபவாசமிருந்து ஜெபிக்கின்றார்கள். அது நல்லது. வேத வார்த்தையின்படி ஏற்புடையது. ஆனால், கர்த்தர் நம் வேண்டுதல்களுக்கு பதில் கொடுக்கும் போது, ஒரு சொல்லாலே தங்கள் நன்றியைக் கூறிவிட்டு ஜனங்கள் சென்று விடுகின்றார்கள். பிரியமானவர்களே, புது வருடம் ஆரம்பித்து, இப்போது அது பழைய வரு டம் போல வந்துவிட்டது. கர்த்தர் செய்த எண்ணற்ற உபகாரங்களுக்கு நன்றி செலுத்துவதற்கு வருட இறுதிவரை காத்திருக்காமல், அவருக்கு உங்கள் மனமார்ந்த நன்றியை நாள்தோறும் சொல்லாலும் செயலாலும் தெரியப்படுத்துங்கள். உங்கள் இருதயமானது கடினப்பட்டு, உணர்வற்றுப் போகாதபடிக்கு, நன்றியறிதலுள்ளவர்களாக இருங்கள்.

ஜெபம்:

தவனமுள்ள ஆத்துமாவைக் திருப்தியாக்கி, பசியுள்ள ஆத்துமாவை நன்மையினால் நிரப்பி நடத்துகின்ற தேவனே, நீர் என் ஆத்துமாவிற்கு செய்த எண்ணற்ற நன்மைகளுக்காக நன்றி. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமென்.

மாலைத் தியானம் - 1 தெச 5:16-18