புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 14, 2019)

தேவனுக்கு பிரியமான சாட்சி…

1 தீமோத்தேயு 6:13

நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து பிரசன்னமாகும்வரைக்கும், நீ இந்தக் கற்பனையை மாசில்லாமலும் குற்றமில்லாமலும் கைக்கொள்ளும்படிக்கு,


காரியாலயம் ஒன்றிலே, இயேசுவை அறிந்து, இரட்சிப்படைந்த இருவர் வேலைபார்த்து வந்தார்கள். அதில் ஒருவர், தான் கிறிஸ்தவன் என்பதை மற்றவர்களுக்கு கூறுவதற்கும், வேதபிரமாணங்களுக்கு எதிரான காரியங்களிலிருந்து தயவுடன் விலகிக் கொள்வதற்கும் எந்த தயக்கமும் காட்டவில்லை. ஆனால், மற்ற மனிதனோ, சக வேலையாட்கள் முன்னிலையில், அப்படியாக காண்பிப்பதை தவிர்த்து, எல்லாவற்றிற்கும் ஒத்து போகக்கூடியவன் என்று காண்பித்து, பல விடயங்களில் சமரசம் செய்து கொண்டான். அதாவது, தான் கிறிஸ்தவன் என்று அறிக்கையிட்டால், தனக்கு வரும் பதவியுயர்வு தடைப்படலாம், பலர் என்னோடு பழகுவதை தவிர்த்துக் கொள்வார்கள் என்ற எண்ணம் அவருடைய மனதிலே இருந்தது. இப்படியாக மனிதர்கள் முன்னிலையிலே நீங்கள் வெட்கம் அடைகி ன்றீர்களா? எனக்கு வரும் சலுகைகள் நிறுத்தப்படலாம் என்ற பயம் உங்களை ஆட்க்கொள்கின்றதா? இந்த வெட்கமும், பயமும் தேவனிடத்திலிருந்து வருகின்றவைகள் அல்ல. அதனால், நாங்கள் போகும் இடங்கள் எல்லாம், நாங்கள் ஒரு புறம்போக்கானவர்கள் என்று காண்பிக்க வேண்டும் என்பது பொருள் அல்ல. ஆனால், நாங்கள் கிறிஸ்து காட்டிய வழியில் நடப்பதனால் யாரும் எங்களை புறம்போக்கானவர்கள் என்று கருதினால், அது அவர்களுடைய தவறான அபிப்பிராயமாக இருக்கட்டும். என்னுடைய மனநிலை எப்படி இருக்க வேண்டும்? வேலை செய்யும் இடத்தில் நான் கிறிஸ்தவன் அல்ல, ஆலயத்திலே மாத்திரம் தான் கிறிஸ்தவன் என்று எண்ணங் கொள்ளக்கூடாது, நாங்கள் போகும் இடங்களில் எல்லாம், எங்கள் பரிசுத்த வாழ்வை காத்துக் கொள்ள வேண்டும். தெய்வீக சுபாவங்களை மற்றவர்களுக்கு செயல்களினாலே வெளிக்காட்ட வேண்டும். இயேசு கிறிஸ்து வெளிப்படும் போது கறையில்லாமல் அவர் முன்னிலையிலே காணப்படும்படியாக, இந்த நாட்களிலே, யாவர் முன்னிலையிலும், இயேசுவின் உண்மையுள்ள சீஷர்களாக நல்ல அறிக்கை செய்கின்றவர்களாக வாழ வேண்டும்.

ஜெபம்:

அன்பின் பரலோக தகப்பனே, உமக்காக வாழ்வதை மேன்மையாக எண்ணி, யாவர் முன்னிலையிலும் நல்ல அறிக்கை செய்யும் நல்ல சீஷனாக வாழ கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - மத்தேயு 10:32-33