புதிய நாளுக்குள்..

தியானம் (ஆவணி 26, 2019)

கர்த்தர் எங்ளோடு இருக்கின்றார்

மாற்கு 4:40

ஏன் இப்படிப் பயப்பட்டீ ர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற் போயிற்று என்றார்.


ஒரு நாள் சாயங்காலத்தில், கர்த்தாகிய இயேசு தம்முடைய சீஷர்களை நோக்கி: அக்கரைக்குப் போவோம் வாருங்கள் என்றார். அவர்கள் தங்களோடு இருந்த ஜனங்களை அனுப்பிவிட்டு அக்கரைக்கு போகும் படியாய் புறப்பட்டார்கள். அப்பொழுது, பலத்த சுழல்காற்று உண்டாகி, படவு நிரம்பத்தக்கதாக, அலைகள் அதின்மேல் மோதிற்று. கப்பலின் பின் னணியத்தில் அவர் தலையணையை வைத்து நித்திரையாயிருந்தார். அவ ர்கள் அவரை எழுப்பி: போதகரே, நாங்கள் மடிந்துபோகிறது உமக்குக் கவலையில்லையா என்றார்கள். அவர் எழுந்து, காற்றை அதட்டி, கடலைப் பார்த்து: இரையாதே, அமைதலாயிரு என்றார். அப்பொழுது காற்று நின்று போய், மிகுந்த அமைதலுண்டாயிற்று. அவர் அவர்களை நோக்கி: ஏன் இப்படிப் பயப்பட்டீர்கள்? ஏன் உங்களுக்கு விசுவாசம் இல்லாமற்போயிற்று என்றார். பிரியமானவர்களே, சற்று சிந்தித்துப் பாருங்கள்! படைப்புக்கள் படைத்தவரை மேற் கொள்ளக் கூடுமோ! அழிவுக்குரியவைகள் நித்தியமானவரை மேற் கொள்ள முடியாது. சர்வ வல்லவர் அக்கரைக்குப் போவோம் என்று சொல்லி இருக்க யாரால் அதை தடுத்து நிறுத்த முடியும்? ஒருவரா லும் கூடாது. கர்த்தரை அறிந்து அவர் வழியாக நன்மைகளை பெற்றுக் கொண்டிருக்கும் எங்களுடைய வாழ்க்கையிலும் நெருக்க ங்கள் சூழ்ந்து கொள்ளும் போது, அழைத்தவர் உண்மையுள்ளவர் என்பதை மறந்து போய்விடுகின்றோம். நாங்கள் கர்த்தரையும் அவரு டைய நன்மைகளையும் மறந்து போவதால், கர்த்தர் எங்கே? ஏன் மௌனமாக இருக்கின்றார்? அவர் என் பிரச்சனைகளை கண்டு கொள்ளுவதில்லையா என்று நாங்கள் முறுமுறுப்பதுண்டு. கர்த்தர் ஒருபோதும் எங்களை மறந்து போவதுமில்லை, கைவிடுவதுமில்லை. ஆனால் பயம் எங்களை ஆட்கொள்வதால், நாங்கள் அவர் எங் ளோடே இருக்கின்றார் என்ற வாக்குத்தத்தத்தை விசுவாசிக்காதபடிக்கு எங்கள் மனக் கண்கள் குருடுபட்டு போய்விடுகின்றது. கலங்காதே திகையாதே, உன் தேவனாகிய கர்த்தர்தாமே உன்னோடேகூட வருகிறார்; அவர் உன்னை விட்டு விலகுவதும் இல்லை. உன்னைக் கைவிடுவதும் இல்லை என்று அன்று மோசே என்னும் தேவ ஊழியருக்கு உரைத்த தேவன் என்றும் மாறாதவராயிருக்கின்றார்.

ஜெபம்:

பரிசுத்தமுள்ள தேவனே, உலகத்திலே நாங்கள் காணும் பயங்கரங்களை கண்டு, உம்மேல் கொண்ட விசுவாசத்தை இழந்து போகாதபடிக்கு, தூய ஆவியின் வல்லமையால் என்னை பெலப்படுத்தி வழிநடத்தும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - உபா 31:6

Category Tags: