புதிய நாளுக்குள்..

தியானம் (மாசி 26, 2019)

எங்கள் பொறுப்புக்கள்...

மத்தேயு 12:36

மனுஷர் பேசும் வீணான வார்த்தைகள் யாவையும் குறித்து நியாயத்தீர்ப்புநாளிலே கணக்கொப்புவிக்க வேண்டும்


பேச்சு சுதந்திரமுள்ள ஒரு நாட்டில் இருந்த அரசியல்வாதி ஒருவர், வெளிநாட்டைக் குறித்த விடயம் ஒன்றில், தன் நாட்டின் தலைவரை மிகவும் வன்மையாக கண்டித்துப் பேசினார். நான் தலைவராக இருந்தால், இந்த விடயத்தை உடனடியாக செய்து முடித்திருப்பேன் என்று கூறினார். பல ஆண்டுகளுக்கு பின், அவர் அந்த நாட்டின் தலைவராக நியமிக்கப்பட்டபின், அந்த விடயத்திலுள்ள எல்லா சிக்கல்களையும் அறிந்து கொண்டார். தான் அறியாமல், முன்னைய தலைவரைக் குறி த்து கண்டித்து பேசிவிட்டேன் என கூறினார். மனிதர்களுடைய வாழ்க்கையிலே, இப்படிப்பட்ட பேச்சுக்களை நாங்கள் கேட்டிருக்கின்றோம். எடுத்துக் காட்டாக, “நான் அதிகாரியாக இருந்தால்” “நான் அதிபராக இருந்தால்” “நான் போதகராக இருந்தால்” “நான் மூப்பராக இருந்தால்” பிரச்சனைகளை சுலபமாக தீர்த்துவிடுவேன் என்று கூறுபவர்கள் அநேகர். ஆனால், அவர்களில் பலர் தற்போது தங்கள் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் பொறுப்புக்களை சரியாக செய்வதில்லை. இப்படிப்பட்டவர்கள், தாங்கள் இன்னமும், முறைப்படி அறியாத காரியங்களைக் குறித்த தீர்ப்பை சற்றும் சிந்திக்காமல் கூறிவிடுவார்கள். அந்த இடத்திலேயே, இவர்கள் தேவனுடைய கட்டளையை மீறுவதால், இவர்கள் தாங்கள் தற்போது வகிக்கும் பொறுப்புக்கு தகுதியற்றவர்கள் என்பதை தங்கள் பேச்சுக்களால் நிரூபிக்கின்றார்கள். பிரியமானவர்களே, அறிந்தோ அறியாமலோ, சில வேளைகளிலே, நாங்களும் மற்றவர்களின் நிலையை உணராது, அவர்களின் வேலைகளையும் பொறுப்புக்களை யும் குறித்து நியாயந்தீர்த்துவிடுகின்றோம். பிதாவாகிய தேவன் அவரவருக்கு கொடுத்த பொறுப்பை தேவ நியமங்களின்படி செய்து முடிப்பவர்களே தங்கள் ஆத்துமாவிற்கு நன்மை செய்கின்றார்கள். மனிதன் தான் பேசும் ஒவ்வொரு வார்த்தையைக் குறித்தும் கணக்கு ஒப்புவிக்க வேண்டும். ஏனெனில், உன் வார்த்தைகளினாலே நீதிமான் என்று தீர்க்கப்படுவாய்; அல்லது உன் வார்த்தைகளினாலே குற்றவாளி என்று தீர்க்கப்படுவாய் என இயேசு கூறியிருக்கின்றார். எனவே, எங்களுக்கு அடுத்த அலுவல்களில் தலைபோடாமல், எங்கள் வாழ்க்கையில் தேவ சித்தத்தை நிறைவேற்றுவோம்.

ஜெபம்:

நீதியின் தேவனே, நான் வீணான வார்த்தைகனை பேசாமல், நீர் எனக்குத் தந்த பொறுப்புக்களை உம்முடைய வார்த்தையின்படி செய்து முடிக்க எனக்கு உணர்வுள்ள இருதயத்தைத் தாரும். இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - யாக்கோபு 1:19