தியானம் (ஐப்பசி 26, 2018)
நேரிய பாதையில் நடக்கும்படி…
யோவான் 6:63
நான் உங்களுக்குச் சொல்லுகிற வசனங்கள் ஆவியாயும் ஜீவனாயும் இருக்கிறது
என்னத்தை உண்போம்? என்னத்தை அணிவோம்? என்னத்தை குடிப்போம்? என்று உயிர்வாழ்வதற்காக, நாளைய நிலையை குறித்து ஒரு சாரர் கவலையடைகின்றார்கள். மிகையான செல்வத்தில் மூழ்கியிருப்போரின் வாழ்க்கையிலே, யாவும் தேவைக்கதிகமாக இருப்பதனால், தங்களிடம் இருப்பதில் என்னத்தை உண்போம்? என்னத்தை அணிவோம்? என்னத்தை குடிப்போம்? என்று அதிகம் அலட்டிக் கொள்வார்கள். திருப்தியடைந்தவன் தேன்கூட் டையும் மிதிப்பான்; பசியுள்ளவனுக்கோ கசப்பான பதார்த்தங்களும் தித்திப்பாயிருக்கும். என்ற நீதிமொழியின்படி தங்கள் நாளாந்த பாடுகளுக்காக உழைப்பவர்கள், தங்களுக்கு கிடைக்கும் எந்த ஆகாரத்தையும் உட்கொண்டு திருப்தியடைகின்றார்கள், இரவிலே நன்றாக நித்திரை செய்கின்றார்கள். நாளாந்தம் வித விதமாய் விருந்து உண்பவர்கள், தங்கள் இன்பகரமான உயர்ரக உணவுப்பண்டங்களினால் திருப்தியடைவதில்லை. இப்படிப்பட்டவர்கள், பசி என்பதன் உண்மைப் பொருளை தங்கள் வாழ்க்கையில் அறியாதவர்கள். தங்களுக்கு கிடைக்கும் ஆகாரம், தங்களின் பிரயாசத்தின் பலன் என்று எண்ணிக் கொள்வதனால், தேவனை மறந்து விடுகின்றார்கள். பெருந்திண்டி மனிதனின் இருதயத்தை பாரமாக்கிவிடுவதினால், தேவனுடைய அழைப்பின் நோக்கத்தை தணியப்பண்ணி விடும். நீங்கள் எந்த நிலையில் இருந்தாலும் படைத்த கர்த்தரை நோக்கிப்பாருங்கள். நாங்கள் பரிபூரணம் அடைகிறதினால் மறுதலித்து, கர்த்தர் யார் என்று சொல்லாதபடிக்கும்; தரித்திரப்படுகிறதினால் திருடி, எங்கள் தேவனுடைய நாமத்தை வீணிலே வழங்காதபடிக்கும், எங்களுக்கு போதுமானதை தந்து அவர் வழிநடத்துவார். அவர் தம்முடைய ஜீவ வார்த்தைகளின் வழியாக, எங்கள் வாழ்க்கை சரியான முறையில் நிர்வாகிப்பதற்கு வேண்டிய ஞானத்தை தந்தருளு கின்றார். எங்கள் உணர்வுகளின்படி வரும் சிந்தைகளின் பலன் அற்பமானது. தேவனிடத்திலிருந்து வரும் வசனங்களோ, எங்கள் நிலைகள் எப்படியிருந்தாலும், நாங்கள் தாபரிக்கும் ஊராகிய பரலோகத்திற்கு எங்களை வழிநடத்திச் செல்கின்றது.
ஜெபம்:
பரலோக தந்தையே, உம்முடைய வார்த்தை ஆவியும் ஜீவனு மாயிருக்கின்றது என்ற இரகசியத்தை உணர்ந்து, அதன்படி நான் என்னுடைய வாழ்வை அமைத்துக் கொள்ள என்னை உணர்வடையச் செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.
மாலைத் தியானம் - நீதிமொழிகள் 30:9