புதிய நாளுக்குள்..

தியானம் (ஐப்பசி 17, 2018)

குறித்த ஓட்டம் முடியும்வரை...

எபிரெயர் 12:1

விசுவாசத்தைத்துவக்குகிறவரும் முடிக்கிறவருமாயிருக்கிற இயேசுவை நோக்கி, நமக்கு நியமித்திருக்கிற ஓட்டத்தில் பொறுமையோடே ஓடக்கடவோம்;.


இயேசு கிறிஸ்துவுக்குள் தங்கள் விசுவாசத்தைக் காத்துக் கொண்ட முன்னோர்கள், தங்கள் வாழ்க்கையை எங்களுக்கு சாட்சியாக விட்டுச் சென்றிருக்கின்றார்கள். வேதத்திலே எழுதப்பட்ட பாத்திரங்கள் மாத்திரமல்ல, கிறிஸ்துவுக்கு பின் இன்றைவரைக்கும் அநேக பரிசுத்தவான்கள் இந்த பூமியிலே நல்ல போராட்டத்தை போராடி தங்கள் ஓட்டத்தை முடித்திருக்கின்றார்கள். இவர்களில் பலரின் வாழ்க்கை வரலாற்றை பரிசுத்த வேதாகமம் வழியாகவும், வேறு புத்தகங்கள் வழியாக வும் நாங்கள் கற்றுக் கொள்ளுகின்றோம். வேதப் புத்தகத்திலே ஒரு சில அதிகாரங்களில் இவர்களின் வாழ்க்கை வரலாறு சுருக்கமாக கூறப்பட்டி ருக்கின்றது. அதை ஒரு சில மணி நேரங்களிலே வாசித்து முடித்து விடுகின்றோம். ஆனால், அவர்கள் வாழ்க்கை ஒரு சில மணிநேரங்கள் அல்ல, பல ஆண்டுகளாக, பல உபத்திரவத்தின் மத்தியில், தங்கள் விசுவாசத்தை தரளவிடாது காத்துக் கொண்டார்கள். அதே போலவே, தேவனைவிட்டு பின்வாங்கிப் போன மனிதர்களும், ஒரே நாளில் அந்த நிலைக்கு வரவில்லை. எடுத்துக்காட்டாக, ராஜாவாக இருந்த சாலமோன் ஞானியின் வாழ்க்கை, மிகவும் சிறப்பாக ஆரம்பித்தது, பின் ஆண்டுகள் செல்லச் செல்ல, அவர் கர்த்தருடைய சத்தத்திற்கு செவி கொடுக்காமல் பாவம் செய்தார். பிற்பாடு கர்த்தர் அவருடன் பேசுவதை நிறுத்திவிட்டார் என்று வேதத்திலே குறிப்பிடப்பட்டுள்ளது. இதே போலவே, இன்னும் நாள் இருக்கின்றது, நாளைக்கு பார்ப்போம் என்று வாழும் மனிதர்கள், பல ஆண்டுகளை விரயம் செய்து, சரீர பலம் குன்றி, வயோதிபம் அடைந்து, இனி மீளமுடியாத நிலைக்கு தங்களை ஆளாக்கி விடுகின்றார்கள். எனவே, கர்த்தருக்கு எதிராக சின்ன விடயமோ, பெரிய விடயமோ எங்கள் வாழ்க்கையில் இருந்தால், அதை நாளைக்கு விட்டு விடுவேன் என்று தாமதம் செய்யாதிருங்கள். அப்படி பின்போடும் போது, பல ஆண்டுகள் வேகமாக ஓடிவிடும். அருமையான சந்தர்ப்பங்களை இழந்து போய்விடுவீர்கள். எனவே பாரமான யாவற்றையும் இன்றே தள்ளிவிட்டு, தேவ கீரிடத்தைப் பெற்றுக் கொள்ளும்படி பொறுமையோடு ஓடக்கடவோம்.

ஜெபம்:

அன்பான தேவனே, எங்களுக்கு முன் வாழ்ந்து, ஜீவ ஓட்டத்தை வெற்றியுடன் முடித்த பரிசுத்தவான்களைப் போல, நாங்களும் தளராது, ஓட்டத்தை ஓட நீர் கிருபை செய்வீராக. இரட்சகர் இயேசு வழியாக ஜெபிக்கிறேன் ஆமேன்.

மாலைத் தியானம் - பிலிப்பியர் 3:14